கடனைப் பெறுவதில் எவ்வித சிக்கல்களும் இல்லை, மீளாய்வுக் கூட்டத்தின் பின் கிடைக்கும் - செஹான் சேமசிங்க - News View

About Us

About Us

Breaking

Saturday, June 8, 2024

கடனைப் பெறுவதில் எவ்வித சிக்கல்களும் இல்லை, மீளாய்வுக் கூட்டத்தின் பின் கிடைக்கும் - செஹான் சேமசிங்க

சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் தவணைக் கடனைப் பெற்றுக் கொள்வதில் எந்தவித சிக்கல்களும் கிடையாதென, நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட மீளாய்வுக் கூட்டத்தை தொடர்ந்து, இரண்டாம் தவணைக் கடன் கிடைக்குமென்றும் அதனைத் தொடர்ந்து மூன்றாம் தவணைக் கடனைப் பெற்றுக் கொள்வதில் எவ்வித சிக்கல்களும் ஏற்படாதென்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அரச நிதி முகாமைத்துவ சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், சர்வதேச கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் பிணைமுறி வழங்கும் நாடுகள் இதுவரை இணக்கப்பாட்டுக்கு வரவில்லை. எனினும் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கு சாதகமான சூழல் காணப்படுகிறது. எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட மீளாய்வு கூட்டத்தைத் தொடர்ந்து இரண்டாம் தவணை கடன் கிடைக்கும்.

பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு தற்போது மீண்டுள்ளது. பொருளாதார மறுசீரமைப்புக்கான சட்டங்கள் பல இயற்றப்பட்டுள்ளன. அரச நிதி முகாமைத்துவ சட்டமூலம் கடன் முகாமைத்துவத்துக்கும் கடன் நிலைபேறான தன்மைக்கும் இன்றியமையாததாகும்.

பொருளாதார மறுசீரமைப்புகளுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை. கடன் முகாமைத்துவத்தை மாற்றியமைத்து ஒரு கேந்திரத்தில் அதன் பொறுப்புக்களை வழங்கி பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்வது அரச நிதி முகாமைத்துவ சட்டமூலத்தின் பிரதான இலக்காகும்.

சர்வதேச மட்டத்தில் பல இணக்கப்பாடுகளை எட்டியுள்ளோம். நாட்டின் கடன் 2022 ஆம் ஆண்டில் மொத்த தேசிய உற்பத்தியில் 128 வீதமாகக் காணப்பட்டது.

அதனை 2032 ஆம் ஆண்டில் 95 சதவீதமாக குறைத்துக் கொள்ளல், 34.6 சதவீதமாக காணப்படும் நிதி விநியோகத்தை 13 வீதமாக குறைத்துக் கொள்ளல் அந்த இலக்காகும்.

வெளிநாட்டுக் கடன் 2022 ஆம் ஆண்டு 9.4 வீதமாக காணப்பட்டது. இதனை 4.5 வீதமாக குறைத்துக் கொள்ளல் என்ற மேற்படி மூன்று பிரதான காரணங்களுக்கு அமையவே சர்வதேச நாணய நிதியம் மற்றும் கடன் வழங்குநர்கள் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கு இலங்கை புதிய கொள்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை சவாலுக்குட்படுத்த முடியாது.எவர் ஆட்சி செய்தாலும் நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் மறுசீரமைப்புக்களை அமுல்படுத்த வேண்டும்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

No comments:

Post a Comment