அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் என்பது, தாம் நட்டம் அடைந்தேனும் நாட்டுக்கு இலாபம் ஈட்டித் தருவதற்காக செயற்பட்ட சங்கமாகும். கடந்த இக்கட்டான காலகட்டத்தில் இலாபம் பாராமல் சேவை வழங்கினர். அதைத்தான் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செய்து வருகிறார் என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
நேற்று (20) பிற்பகல் பொரலஸ்கமுவ கோல்டன் ரோஸ் ஹோட்டலில் நடைபெற்ற அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் 9 ஆவது மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இதனைக் குறிப்பிட்டார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, இவ்வளவு குறுகிய காலத்தில் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க முடியும் என்று நாமும் நினைக்கவில்லை. கண்ணால் பார்க்கவும், காதால் கேட்கவும் முடிந்தவர் என்றால், நம் நாட்டை அவர் இந்த நிலைக்கு கொண்டு வந்துவிட்டார் என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
வங்குரோத்து அடைந்த நாடுகள் மத்தியில் மிக விரைவாக இயல்பு நிலைக்கு வந்த நாடு இலங்கை என்பதை உலகமே ஏற்றுக் கொள்கிறது, உலகமே பாராட்டுகிறது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டிருப்பது பொருளாதார அதிசயம் என உலக நாடுகள் கூறுகின்றன. வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை இவ்வளவு சீக்கிரம் மீட்டெடுத்த நாட்டை நாங்கள் பார்த்ததில்லை என்கிறார்கள்.
எத்தியோப்பியாவின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் பணிகளின்போது, இலங்கையின் ரணில் விக்ரமசிங்கவை பார்க்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. ஆனால் நம்நாட்டு மக்கள் அவர் மீது குற்றம் சாட்டுகிறார்கள்.
நாட்டின் இந்த உண்மை நிலையை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.’’ என்று பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.
அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசகர், வண. குப்பியவத்தை போதானந்த தேரர், பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க, சுகாதார அமைச்சின் அதிகாரிகள், மருந்து இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள், அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment