நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியில் அரசாங்க நிதிக் குழுவின் பணிகள் இன்றியமையாதது. இதற்கான வளங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவரான ஹர்ஷ டி சில்வாவை பதவி நீக்க வேண்டிய அவசியம் கிடையாது என சுட்டிக்காட்டிய அவர், பொருளாதார பாதிப்பிலிருந்து நாடு மீள்வதற்கு குழுவினூடாக, ஹர்ஷ டி சில்வா சிறந்த ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்றையதினம் அரசாங்க நிதி தொடர்பான குழுவின் அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றிய ஹர்ச டி சில்வா எம்.பி, முன்வைத்த சில கூற்றுக்களுக்கு பதில் அளிக்கையிலேயே, அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த இவ்வாறு தெரிவித்தார்.
ஹர்ஷ டி சில்வா தமது உரையின் போது, அரச நிர்வாகத்தில் இடம்பெறும் மோசடிகளை சுட்டிக்காட்டுவதால் நான் பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளேன். தேவையாயின் என்னைப் பதவியிலிருந்து நீக்குங்கள். ஆனால் பதவியில் இருக்கும் வரை எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய நான் செயற்படுவேன். பாரிய நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவராக நான் நியமிக்கப்பட்டேன். குழுவின் தலைவர் பதவியிலிருந்து இரு தடவைகள் நீக்கப்பட்டேன். எதிர்க்கட்சித் தலைவரின் கடுமையான வலியுறுத்தலைத் தொடர்ந்தே குழுவின் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டேன். அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவர் பதவி வகிப்பதால் எவ்வித சிறப்புரிமையும் எனக்கு கிடைப்பதில்லை. குழுவின் பணிகளை முறையாக முன்னெடுப்பதற்கு அலுவலகமும், சேவையாளர்களும் கூட கிடையாது. குழுவின் அன்றாட நடவடிக்கைகளை முடித்து விட்டு, நாளாந்தம் அதிகாலை 2 மணிக்கே உறங்கச் செல்கிறேன். குழுவின் பணிகளை மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்கும் தரப்பினருக்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கு எனது சொந்த நிதியிலேயே சம்பளம் வழங்கியுள்ளேன். இவ்வாறு அந்த செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுப்பது சாத்தியமற்றது என்று தெரிவித்தார்.
இதற்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment