இளைஞர்கள் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் போனமை தொடர்பில் தமக்கெதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை இடைநிறுத்த இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறு கோரி கடற்படை முன்னாள் தளபதி அட்மிரால் ஓஃப் த ப்லீட் வசந்த கரன்னாகொட தாக்கல் செய்திருந்த ரீட் மனுவை விசாரணை செய்வதற்கு ஐந்து நீதியரசர்களைக் கொண்ட மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று (07) தீர்மானித்தது.
இது தொடர்பான மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முழு அமர்வு முன்னிலையில் விசாரிக்குமாறு சட்டமா அதிபரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்ததன் பின்னர் இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் சஷி மகேந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் லஃபர் தாஹிர் முன்னிலையில் இதற்கு முன்னர் எடுத்துக் கொள்ளப்பட்டதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதன்போது முழு நீதிபதிகள் குழு முன்னிலையில் மனுவைக் எடுத்துக் கொள்வதற்கான கோரிக்கையை பரிசீலித்ததன் பின்னர், அது குறித்து முடிவெடுப்பதற்காக பிரதம நீதியரசருக்கு அனுப்பப்பட்டதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.
மனுதாரருக்கு எதிரான உயர் நீதிமன்ற வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட குழாம் முன் விசாரணைக்கு வருவதால், இந்த மனுவை மூன்று நீதிபதிகளுக்கும் மேற்பட்ட நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் பரிசீலிக்க வேண்டும் என்று அவர் நீதி மன்றத்தில் கோரியிருந்தார்.
இதற்கமைவாக, மனுவை விசாரிப்பதற்காக ஐந்து பேர் கொண்ட முழு அளவிலான நீதிபதிகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கமைவாக எதிர்வரும் 25ஆம் திகதி மனுவை கவனத்தில் எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
2008ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தமக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணையை இடைநிறுத்துமாறு கோரி முன்னாள் கடற்படைத் தளபதி தாக்கல் செய்த மனுவில் பிரதிவாதியாக சட்டமா அதிபர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இந்த ரிட் மனுவில் எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்புமாறும் மேலும், இது தொடர்பான குற்றச்சாட்டு வழக்கின் விசாரணையை நிறுத்தி வைத்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுதாரர் தனது மனுவில் கோரியிருந்தார்.
11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் விசேட மூவரடங்கிய கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட கடற்படைத் தளபதி அட்மிரால் ஓஃப் த ப்லீட் வசந்த கர்ணாகொடவுக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை வழக்கின் விசாரணையை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் திகதி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
அப்போதைய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி.நவாஸ் மற்றும் நீதியரசர் சோபித ராஜகருணா ஆகியோர் இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்தனர்.
வழக்கு விசாரணையை இடைநிறுத்துமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வசந்த கர்னாகொட தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடியும் வரை இந்த இடைக்கால உத்தரவு அமுலில் இருக்கும்.
இந்த மனுவில் சம்பந்தப்பட்ட காணாமல் போன பிள்ளைகளின் பெற்றோர் சமர்ப்பித்த இடைக்கால மனுவை நீதிமன்றம் அனுமதியளித்தது.
பெற்றோர்கள் சார்பில் சட்டத்தரணி நுவான் போபகே ஆஜரானார். முன்னாள் கடற்படைத் தளபதி சார்பில் ஜனாதிபதியின் சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா ஆஜரானார்.
No comments:
Post a Comment