சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்திற்கு ஆடும் பொம்மை ஆட்சியே நாட்டில் உள்ளது : வரி சுனாமியை மக்களின் தோள்களில் சுமத்தியுள்ள அரசாங்கம் என்கிறார் சஜித் பிரேமதாச - News View

About Us

About Us

Breaking

Monday, June 17, 2024

சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்திற்கு ஆடும் பொம்மை ஆட்சியே நாட்டில் உள்ளது : வரி சுனாமியை மக்களின் தோள்களில் சுமத்தியுள்ள அரசாங்கம் என்கிறார் சஜித் பிரேமதாச

இன்று சமூகத்தில் மீள முடியாத அழுத்தம் உருவெடுத்து மக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மக்கள் வறுமையில் வாடினாலும் வரிக்கு மேல் வரி விதிக்கும் வரி சுனாமி விதிப்பது நின்றபாடில்லை. சர்வதேச நாணய நிதியம் கூறியதாக வாடகை வீட்டிற்கும் வரி விதிக்கும் சூத்திரத்தை அரசாங்கம் உருவாக்கி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் சொல்வதை எல்லாம் செய்வதற்கு இந்த அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை வழங்கப்படவில்லை. அரசாங்கம் வினைத்திறன் மிக்கதாக இருந்தால், மக்களுக்காக நல்லதொரு உடன்பாட்டை எட்டுவதற்கான வாய்ப்புகள் இருந்தும் அவ்வாறான எதுவும் நடக்கவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்திற்கு ஆடும் பொம்மை ஆட்சியே நாட்டில் உள்ளது. இந்த அரசாங்கம் வரி சுனாமியை மக்களின் தோள்களில் சுமத்தியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 243 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், கொழும்பு, கெஸ்பேவ, இரத்தினபிட்டிய ஆனந்த புதிய மாதிரி கல்லூரிக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு 17 ஆம் திகதி இடம்பெற்றது. இதன்போது, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவிக்கையில், எமது நாட்டின் இறையாண்மையை நாங்கள் யாருக்கும் விற்கவில்லை. நல்ல நிலையிலிருந்து, நல்லதொரு கலந்துரையாடலுக்குச் சென்றால் மக்கள் தரப்பில் செய்ய வேண்டியதைச் சரியாகச் செயல்படுத்த முடியும்.

மக்களின் அழுத்தத்தை குறைத்து, மக்களின் அசௌகரியங்களை குறைப்பதன் மூலம், ஒடுக்குமுறையான மக்கள் வாழ்க்கையை உருவாக்காமல் நல்ல ஆக்கபூர்வமான உடன்பாட்டை எட்ட முடியும். என்றாலும், இன்று பொம்மை அரசாங்கமே காணப்படுவதாகவும், இது இந்த யுகத்தின் அவலம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எமது நாட்டிற்கு சர்வதேச நாணய நிதியத்தின் தலையீடு தேவை. வங்குரோத்தான கோட்பாடுகளின் அடிப்படையில் நாம் செயல்பட்டால், எமது நாடு இன்னுமொரு பாதாளத்தில் விழும். நாட்டுக்கு பெற முடியுமான சிறந்ததை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

டிஜிட்டல் ஶ்ரீலங்காவை உருவாக்குவதே ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையாக அமைந்து காணப்படுகிறது. என்றாலும் தரம் 6-13 வரை சிங்களத்தில் தகவல் தொழில்நுட்பம் கற்பிக்கப்படுகிறது. ஆனால் தரம் 1-13 வரை ஆங்கிலம் மொழியில் கட்டாய பாடமாக இது அமைய வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.

பாடசாலைகளில் நிலவிவரும் மனித வளம் மற்றும் பௌதீக வளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தே இவையனைத்தும் மேற்கொள்ளப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

உலகின் புதிய போக்காக அமைந்து காணப்படும் பசுமைக் கல்வி, பசுமை தொழில்நுட்பம் மற்றும் பசுமையை மையமாகக் கொண்ட திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம், பசுமையை மையமாகக் கொண்ட நிலையான அபிவிருத்தியில் கார்பனை வெளியேற்றும் நாடாக மாற வேண்டும் என்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும்.

பசுமை அபிவிருத்தி குறித்து பலர் பேசினாலும் அது களத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒன்றாக அமையவில்லை. சகல பாடசாலைகளையும் மையமாக வைத்து, பசுமை நிலைபேறு அபிவிருத்தியை நடைமுறைப்படுத்துவது மிகவும் பொருத்தமானதாக அமையும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment