நாட்டின் முக்கிய மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பி தர்மலிங்கம் சித்தார்த்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மாகாண சபை முறைமையை தொடர்வதற்கு இம்மூவரும் இணங்கியுள்ளதால், இந்த சந்தர்ப்பத்தில் திருத்தத்தைக் கொண்டு வந்து மாகாண சபைத் தேர்தலை நடத்தி அச்சபைகளை இயங்கச் செய்ய வேண்டும் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.
இதற்கான நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டால் மட்டுமே, ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ் மக்கள் அவர்களுக்கு ஆதரவளிப்பார்கள் என்றும் அவர் சபையில் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், தேர்தல் முறைமை மாற்றப்பட்டு மாகாண சபைத் தேர்தல்கள் மிக நீண்ட காலமாக நடைபெறாமல் உள்ளன.\
இந்த தேர்தல் முறைமை 2017 ஆம் ஆண்டு மாற்றப்பட்டு தொகுதி நிர்ணய சபை அமைக்கப்பட்டு ஒரு அறிக்கையையும் வெளியிடப்பட்டது.
பாராளுமன்றத்தில் 2019 இல், இவ்வறிக்கை கொண்டுவரப்பட்டபோது முழுமையாக நிராகரிக்கப்பட்டது. இதனால்தான் இதுவரை மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறாமல் உள்ளது.
இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த தொகுதி நிர்ணய அறிக்கையை சபையில் சமர்ப்பித்த அமைச்சரே, இதற்கு எதிராக வாக்களித்தார்.
அதன் பின்னர் சுமந்திரன் எம்பி பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்து 2017 ஆம் ஆண்டு திருத்தத்தை நீக்கி விட்டு தேர்தலை நடத்த முடியும் என்ன கேட்டுக் கொண்டார். அதனை உயர் நீதிமன்றம் கூட சிறு திருத்தத்துடன் ஏற்றுக் கொண்டுள்ளது.
இப்போது பிரதமராக பதவி வகிக்கும் அப்பபோதைய மாகாண சபைகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன, தலைமை வகித்த ஒரு தெரிவுக்குழுவும் அப்போது அதனை ஏற்றிருந்தது. இப்போது இதற்கான சிறந்த சந்தர்ப்பம் காணப்படுகிறது.
தமிழ் மக்களுக்கு அதிகாரப்பரவலாக்கத்தை வழங்குவதன் மூமேதான், நாட்டில் பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும்.
எனவே சுமந்திரனின் பிரேரணையை விவாதித்து நிறைவேற்றுவதன் மூலம் தமிழ் மக்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)
No comments:
Post a Comment