வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காம ஆடிவேல் விழாவிற்குச் செல்லும் பாத யாத்திரிகர்களுக்கான காட்டுப்பாதை எதிர்வரும் 30ஆம் திகதி திறக்கப்படும். மீண்டும் அது ஜூலை 11 ஆம் திகதி மூடப்படும்.
முன்னர் இப்பாதை திறக்கப்படும் திகதி ஜூலை 1 ஆம் திகதி என மொனராகலையில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. பின்னர் லாகுகல பிரதேச செயலகத்தினால் அது ஜுலை 2 ஆம் திகதி என கூட்டத்தில் கூறப்பட்டது.
இதனை காரைதீவு முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில், உதவிக் கல்விப் பணிப்பாளர் விரி.சகாதேவராஜா ஆகியோர் சபையில் எழுந்து இக்காலம் அறவே போதாது. அது ஒரிருநாள் முந்தி மாற்றப்பட வேண்டும். யாத்திரீகர்களின் நலன்கள் கட்டாயம் பேணப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
அதன் பலனாக அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்ட அரசாங்க அதிபர்களும் அந்த இடத்தில் கலந்துரையாடி இத்திகதி இம்மாதம் 30 ஆம் திகதியாக மாற்றப்பட்டது.
கடந்த (7) வெள்ளிக்கிழமை உகந்த மலை முருகன் ஆலயத்தின் காரைதீவு மடத்தில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம தலைமையில் இடம் பெற்ற கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment