வரி விதிப்பால் மக்கள் அசௌகரியம்; ராஜபக்ஷர்களும் அமைச்சர்களும் கப்பலில் கொண்டாட்டம் : எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றில் சீற்றம் - News View

About Us

About Us

Breaking

Thursday, January 11, 2024

வரி விதிப்பால் மக்கள் அசௌகரியம்; ராஜபக்ஷர்களும் அமைச்சர்களும் கப்பலில் கொண்டாட்டம் : எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றில் சீற்றம்

வரி விதிப்பால் மக்கள் அசௌகரியம் அடைந்துள்ள நிலையில், ராஜபக்ஷர்களும் அமைச்சர்களும் கப்பலில் சென்று கொண்டாட்டம் நடாத்தியுள்ளதாக, எதிர்க் கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ (11) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜனவரி மாதம் பாடசாலை மாணவர்களுக்கான சீசன் டிக்கெட்டுகள் இரத்து செய்யப்பட்டுள்ள வேளையில், VAT வரி விதிப்பால் மக்கள் பல்வேறு அழுத்தங்களுக்கும் அல்லல்களுக்கும் உள்ளாகியுள்ள இவ்வேளையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பாராளுமன்றத்தில் அரசாங்கத்துடன் தொடர்புடைய அமைச்சர்கள் குழுவொன்று துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான ஹன்ஸகாவா மற்றும் தியாகொவுல்லா ஆகிய 02 கப்பல்களை பயன்படுத்தி கடந்த இரு நாட்களுக்கு முன்பு கடலில் விருந்துபசார கொண்டாட்டமொன்றை நடத்தியுள்ளனர் என்றும், இதற்கு துறைமுக அமைச்சர் எழுத்து மூல அனுமதியும் வழங்கியுள்ளார் என அவர் தெரிவித்தார்.

நாடு வங்குரோத்தாகி கிடக்கும் இவ்வேளையில் மதுபானம், துறைமுகத்தில் உள்ள உணவகத்தில் இருந்து உணவு குடிபான வகைகளைக்கூட பெற்றுக்கொண்டு, நாட்டிற்குச் சொந்தமான கப்பல்களைப் பயன்படுத்திக்கொண்டு எரிபொருளை விரயம் செய்வதும், நடுக்கடலில் விருந்து நடத்தி கொண்டாட்டம் நடத்த, கும்மாளமடிக்க முடியுமா என்பது பிரச்சினைக்குரிய விடயம் என்றும், அமைச்சர்களின் தனிப்பட்ட செலவில் இந்த விருந்துபசாரங்களை நடத்துவது பிரச்சினையல்ல என்றாலும், அரச வளங்களைப் பயன்படுத்தி இவ்வாறான விருந்துபசாரங்கள் நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த விருந்துக்கு சிவப்பு கம்பளம் கூட விரிக்கப்பட்டதாகவும், இவ்வாறு மக்கள் பணத்தை செலவு செய்து விருந்து வைப்பது தொடர்பில் தான் ஆட்சேபனை தெரிவித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.

No comments:

Post a Comment