கல்வியியற் கல்லூரி ஆட்சோ்ப்பில் இஸ்லாம் பாட ஆசிரிய விண்ணப்பதாரிகள் மீண்டுமொருமுறை புறக்கணிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அகில இலங்கை முஸ்லிம் வாலிப முன்னணிகளினம் சம்மேளனம் இது குறித்து உடனடியாக கல்வி அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
சம்மேளனத்தின் தேசியத் தலைவர் எம்.என்.எம்.ஷாம் நவாஸ் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அரச பாடசாலைகளில் இஸ்லாம் பாடத்தை தமிழ் மற்றும் சிங்கள மொழியில் கற்பிப்பதற்காக நாடளாவிய ரீதியில் சுமார் 1,500 வெற்றிடங்கள் நிலவுகின்றது. கடந்த 20 வருட காலமாக மௌலவி ஆசிரியர் நியமனமும் வெறும் அரசியல் வாக்குறுதியாகவே இருந்து வருகிறது.
2022 ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 2,590 (8.11%) மாணவர்கள் இஸ்லாம் பாடத்தில் சித்தியடையவில்லை, அதேபோல 4,305 (13.48%) மாணவர்கள் வெறுமனே சாதாரண தர சித்தியினையே பெற்றிருந்தனர்.
நிலைமை இவ்வாறு இருக்க குறிப்பாக 2023/24 ஆண்டுக்கான கல்வியியற் கல்லூரி மாணவர் அனுமதி விண்ணப்பம் கோரலில் இஸ்லாம் சமய பாட ஆசிரிய விண்ணப்பதாரிகளுக்கான இடம் அட்டாளைச்சேனைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாமல் விரிவுபடுத்துவதுடன் க.பொ.உ.த. வெட்டுப் புள்ளிகளுடன் ஏனைய சமயங்களுக்கு வழங்கப்பட்டது போன்ற மேலதிக புள்ளிகள் அல் ஆலிம், அஹதிய்யா இறுதிப் சான்றிதழ் பரீட்சை அல்லது தர்மாச்சாரிய (தீனியாத்) பரீட்சை சான்றிதழ்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என அகில இலங்கை முஸ்லிம் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் வேண்டுகிறது.
2022.07.22 இல் வெளிவந்த 2290 இலக்க வர்த்தமானியின் பிரகாரம் இஸ்லாம் சமய பாட தகைமைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக தஹம் இறுதிச் சான்றிதழ் பரீட்சை மற்றும் தீனியாத் தர்மாச்சாரிய பரீட்சை வர்த்தமானியில் மேலதிக தகைமைகளாகக் கருதப்படவில்லை. இந்த தவறு அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ள வர்த்தமானியில் திருத்தியமைக்கப்பட வேண்டும் என அகில இலங்கை முஸ்லிம் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் கல்வி அமைச்சரை வேண்டியுள்ளது.
அனைத்து அரச ஆட்சேர்ப்புக்களிலும் அனைத்து சமயங்களுக்கும் இனக்குழுக்களுக்கும் சம அந்தஸ்து வழங்கப்படுவதன் ஊடாகவே நாட்டில் வளமிக்க இளம் சந்ததியைக் கட்டியெழுப்ப முடியுமென அகில இலங்கை முஸ்லிம் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் உறுதியாக நம்புகிறது எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Vidivelli
No comments:
Post a Comment