சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் உயர் பதவியில் இருக்கும்போது சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்படுமா? - காவிந்த ஜயவர்தன - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 15, 2023

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் உயர் பதவியில் இருக்கும்போது சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்படுமா? - காவிந்த ஜயவர்தன

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன பொலிஸ் சேவையில் உயர் பதவியில் இருக்கும்போது சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்படுமா? பாதிக்கப்பட்டோருக்கான நீதி தொடர்ந்து இழுபறி நிலையில் உள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் காவிந்த ஜயவர்தன நீதியமைச்சரிடம் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற அமர்வில் வாய் மூல விடைக்கான வினாக்களின் போது நீதியமைச்சரிடம் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை நீதியும் கிடைக்கவில்லை, நிதியும் கிடைக்கவில்லை. நிதி மற்றும் நீதி இரண்டும் தொடர்ந்து இழுபறி நிலையில் உள்ளது.

சிரியாவுக்கு சென்று ஒரு தரப்பினர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் பயிற்சி பெற்றுள்ளார்கள் என்று நீங்கள் (நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவை நோக்கி) குறிப்பிட்டீர்கள். ஆனால் நாட்டில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை போன்று மிலேட்சத்தனமான தாக்குதல் இடம்பெறும் என்ற எவரும் எதிர்பார்க்கவில்லை.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கில் தற்போதைய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தனவின் பெயர் குற்றவாளியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தில் குற்றவாளியாக பெயர் குறிப்பிடப்பட்டு நட்டஈடு செலுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நபர் பொலிஸ் சேவையில் உயர் பதவியில் இருக்கும்போது சுயாதீனமான விசாரணைகள் முன்னெடுக்கப்படுமா ? என்பது சந்தேகத்துக்குரியது என்றார்.

No comments:

Post a Comment