(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
பொருளாதார பாதிப்புக்கு கோட்டபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ, பி.பி ஜயசுந்தர, லக்ஷ்மன், கப்ரால், ஆடிகல உட்பட நாணய சபை பொறுப்புக்கூற வேண்டும் என உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம். இந்த ஏழு பேருக்கு எதிராக நாட்டு மக்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து 1,50000 ரூபா நட்டஈடு பெற்றுக் கொள்ள முடியும் என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல சபையில் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, நாட்டின் தற்போதைய பொருளாதார பாதிப்புக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டய ராஜபக்ஷ உட்பட முன்னாள் நிதியமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ ஆகியோர் பொறுப்புக்கூற வேண்டும்.
அத்துடன் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர்.ஆடிகல, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் டபிள்யூ. டி.லக்ஷ்மன், முன்னாள் ஜனாதிபதி செயலாளர் பி.பி.ஜயசுந்தர உட்பட மத்திய வங்கியின் நாணய சபையின் உறுப்பினர்கள் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என்று பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர் குழாம் ஏகமனதாக தீர்ப்பளித்துள்ளது.
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க உத்தரவிடுமாறு வலியுறுத்தி இலங்கை வர்த்தக சபையின் முன்னாள் தலைவர் சந்ரா ஜயரத்ன, உள்ளிட்ட தரப்பினர் உயர் நீதிமன்றத்துக்கு தாக்கல் செய்த இரண்டு அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணை செய்து பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர் குழாம் இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது.
பொருளாதார பாதிப்புக்கு இவர்கள்தான் பொறுப்புக்கூற வேண்டும் என்பதை நாங்கள் ஆரம்பத்தில் இருந்து குறிப்பிட்டோம். கடந்த மூன்று வருடமாக இதனையே குறிப்பிட்டோம். எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. உயர் நீதிமன்றத்துக்கும், மனுதாரர்களுக்கும் தலை வணங்குகிறோம். நாட்டு மக்களுக்கு நீதிமன்றத்தின் ஊடாக உண்மையை வெளிப்படுத்தியதற்கு மதிப்பு தெரிவிக்கிறோம்.
இலங்கையில் 22 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். இவர்கள் அனைவரும் நீதிமன்றத்துக்கு சென்று இந்த ஏழு பேரிடமிருந்து 1,50000 ரூபா பெற்றுக் கொள்ள முடியும். அத்துடன் இந்த மனுதாரர்களுக்கு ராஜபக்ஷர்கள் உட்பட ஏழு பேரும் 1,50000 ரூபா செலுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. ஆகவே நாட்டு மக்கள் எவரும் ராஜபக்ஷர்கள் உட்பட ஏழு பேருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என்றார்.
No comments:
Post a Comment