(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
நாட்டை வங்குரோத்து நிலைக்குத்தள்ளி 40 இலட்சம் மக்களை ஏழைகளாக்கிய ராஜபக்ஷர்கள் உட்பட அரச உயர் அதிகாரிகளின் குடியுரிமை தொடர்பில் பாராளுமன்றம் எடுக்கும் தீர்மானம் என்ன? இவர்கள் பொருளாதார படுகொலையாளிகள் என்று உயர் நீதிமன்றம் முத்திரை பதித்துள்ளதற்கு நாட்டு மக்கள் சார்பில் நீதியரசர்களுக்கும், மனுதாரர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் எவ்வாறு வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவு வழங்குவார்கள் என்பதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (15) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, 2003 ஆம் ஆண்டு நிதி பொறுப்பு சட்டத்துக்கு அமைய வரவு செலவுத் திட்டத்தின் பற்றாக்குறை 5 சதவீதத்துக்கும் குறைவானதாக காணப்பட வேண்டும் என அமைச்சரவை அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிடுகிறார். அவ்வாறாயின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சட்டவிரோதமானது. ஏனெனில் இந்த வரவு செலவுத் திட்டத்தின் பற்றாக்குறை 5 சதவீதத்துக்கும் அதிகமானதாக காணப்படுகிறது. ஆகவே அமைச்சர் பந்துல குணவர்தன 5 சதவீத விவகாரத்தை பாராளுமன்றத்தில் குறிப்பிடாமல் அமைச்சரவையில் குறிப்பிட்டால் ஏதேனும் மாற்றம் ஏற்படும்.
நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் யார் ? என்பதை உயர் நீதிமன்றம் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தியுள்ளது. உயர் நீதிமன்றத்தின் நீதியரசர்கள் உட்பட மனுதாரர்களுக்கு நாட்டு மக்கள் சார்பில் கௌரவத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
பொருளாதார படுகொலையாளிகள் என்று உயர் நீதிமன்றத்தினால் முத்திரை பதிக்கப்பட்டுள்ள ராஜபக்ஷர்கள் ஆட்சிக்கு வரும்போது நாட்டில் ஏழ்மையால் 30 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் அவர்களின் முறையற்ற ஆட்சியினால் குறுகிய காலத்துக்குள் நாட்டின் ஏழ்மை நிலை 70 இலட்சமாக உயர்வடைந்துள்ளது.
உலக வங்கியின் மதிப்பீட்டுக்கு அமைய 25 சதவீதமானோர் ஆரோக்கியமான உணவு பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளார்கள். மறுபுறம் சுமார் 12.5 மில்லியன் மக்கள் கல்வி, சுகாதாரம் உட்பட அத்தியாவசிய சேவைகளில் ஏழைகளாக உள்ளார்கள். இலங்கையின் நிலை தொடர்பில் சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கப்படும் ஆய்வுகளில் இலங்கை கீழ் மட்டத்தில்தான் உள்ளது.
மூன்று வேளையல்ல ஒருவேளை உணவைக்கூட பெற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மின் கட்டணம் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு உயர்வடைந்துள்ளது. ஒட்டு மொத்த மக்களின் வாழ்க்கை கட்டமைப்பும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்த ஜனாதிபதி தற்போது எரிபொருளுக்கான வரிசை இல்லை, மின் விநியோகம் துண்டிக்கப்படுவதில்லை என்று குறிப்பிடுகிறார். நாங்கள் இதனை மறுக்கவில்லை. ஆனால் இந்த நிலை நிலையானதா என்பதை ஆராய வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதை நாங்கள் மறுக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் எடுத்த தவறான தீர்மானங்களினால் நாடு வங்குரோத்து நிலையடையும் என்பதை உணர்ந்து 2020 ஆம் ஆண்டு முதல் சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறு அப்போதைய அரசாங்கத்திடம் வலியுறுத்தினோம்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை நாடுமாறு நாங்கள் முன்வைத்த கோரிக்கையை மலினப்படுத்தும் வகையில் அப்போதைய நிதி மூலதனச்சந்தை இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டிய அவசியமில்லை. பொருளாதாரத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று தன்னிச்சையாக கருத்து தெரிவித்தார்.
பொருளாதார பாதிப்புக்கு முன்னாள் ராஜபக்ஷர்கள் உட்பட அரச உயர் அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டும் என உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
ஆகவே இவர்களின் குடியுரிமை தொடர்பில் பாராளுமன்றம் எடுக்கும் தீர்மானம் என்ன, நிலைப்பாடு என்ன ? ராஜபக்ஷர்களின் தவறான நிர்வாகத்தினால் கடந்த ஒன்றரை வருட காலப்பகுதியில் மாத்திரம் 91 சதவீதத்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளன.
நாங்கள் செல்லும் பாதை, எமது பொருளாதார திட்டங்கள் சரி என்று ஜனாதிபதி குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டபோது 'காக்கையின் கூட்டில் குயில் முட்டையிட்டதற்கு ' இணையான நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளார் என்று நான் குறிப்பிட்டேன். அது தற்போது உண்மையாகியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எமது நிதியமைச்சர். ஆகவே எமது கொள்கைகளை செயற்படுத்த வேண்டும் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிடுகிறார். ஆகவே ஜனாதிபதியின் கொள்கைகளை செயற்படுத்த பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் இடமளிக்கமாட்டார்கள்.
2048 ஆம் ஆண்டு இலங்கையை பொருளாதார மேம்பாட்டுக்கு நிலைப்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த ஜூன் மாதம் குறிப்பிட்டார். பொருளாதார மீட்சிக்கான திட்டத்தை சமர்ப்பிக்குமாறு நான் அவரிடம் பலமுறை வலியுறுத்தினேன். ஆனால் இதுவரை எவ்வித திட்டங்களையும் அவர் சமர்ப்பிக்கவில்லை.
பொருளாதார மீட்சிக்கு சிறந்த திட்டங்கள் இதுவரை வகுக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் எவ்வாறு முன்னேற்றமடைய முடியும் என்றார்.
No comments:
Post a Comment