முண்டமாக மீட்கப்பட்ட பெண் : பிரதான சந்தேகநபர் சரணடைந்த நிலையில் கைது : பயன்படுத்திய வாகனமும் கையளிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, October 2, 2023

முண்டமாக மீட்கப்பட்ட பெண் : பிரதான சந்தேகநபர் சரணடைந்த நிலையில் கைது : பயன்படுத்திய வாகனமும் கையளிப்பு

சியம்பலாப்பே பிரதேசத்தில் தலை மற்றும் கால்கள் இல்லாத நிலையில் கண்டெடுக்கப்பட்ட பிரதீபா சில்வா எனும் பெண்ணின் சடலம் தொடர்பான சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் சபுகஸ்கந்த பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சியம்பலாப்பே தெற்கில் வசிக்கும் 53 வயதுடைய சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தனது சட்டத்தரணிகளுடன் பொலிஸில் வந்து சரணடைந்ததைத் தொடர்ந்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த கொலைச் சம்பவத்துக்கு பிரதான சந்தேகநபருக்கு உதவியதாக தெரிவிக்கப்படும் 48 வயதுடைய அதே பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரும் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

தரகரான இவர், கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் பாகங்களை துண்டாக்குவதற்கு பிரதான சந்தேகநபருக்கு உதவியதாக விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

இதேவேளை, சந்தேகநபர்கள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தபோது, ​​பெண்ணின் சடலத்தை ஏற்றிச் செல்ல பயன்படுத்திய வாகனத்தையும் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சபுகஸ்கந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

51 வயதான பிரதீபா எனும் பெண் கடந்த செப்டெம்பர் 27ஆம் திகதி வீடு திரும்பவில்லையென அவரது மகள் முல்லேரியா பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

முல்லேரிய பொலிஸ் நிலையத்தினால் பொலிஸ் குழு ஒன்று இது தொடர்பில் அவரது கையடக்கத் தெலைபேசி தகவல்களை வைத்து விசாரணைகளை மேற்கொண்டதில், குறித்த பெண் சென்ற இடங்கள் தொடர்பில் தேடிய பொலிஸார், உணவகம் ஒன்றின் CCTV காட்சியின் அடிப்படையில் அவர் கார் ஒன்றில் நபர் ஒருவருடன் வந்து உணவு உண்டு விட்டு அங்கிருந்து புறப்பட்டிருந்தமை தெரிய வந்துள்ளது.

குறித்த கார் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், அது சியம்பலாப்பே பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர் சுதீர வசந்த என்பவருடையது என தெரியவந்துள்ளது.

குறித்த நபர் இப்பெண்ணுடன் சுமார் 20 வருடங்களாக முறையற்ற உறவில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனைத் தொர்ந்து குறித்த நபரின் சியாம்பலாப்பே பகுதியில் உள்ள வீடு ஒன்றை பொலிஸார் சோதனையிட்ட போது, ​​அறையொன்றினுள் இரத்தக் கறைகள் மற்றும் நீண்ட கூந்தல் மற்றும் வீட்டின் வெளியே, இரத்தக் கறையுடன் கூடிய பகுதியளவில் எரிந்த நிலையிலான பெண்ணின் ஆடைகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்தில் களனி கங்கை கரையில் தலை மற்றும் கை, கால்கள் இல்லாத பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதோடு, அது குறித்த சடலம் நீண்டகாலமாக காணாமல் போயிருந்த 51 வயதுடைய பிரதீபா சில்வாவின் சடலம் என, அவரது குடும்பத்தினரால் அடையாளம் காணப்பட்டிருந்தது.

குறித்த பெண்ணுக்கு பிரதான சந்தேகநபரான வர்த்தகர் பணம், வீடு உள்ளிட்டவற்றை வழங்கி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுவதோடு, பணத் தகராறு காரணமாக இருவருக்கும் சிறிது காலமாக தகராறு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment