இலங்கை வருகிறது IMF அதிகாரிகள் குழு : முன்னேற்றம் தொடர்பில் திருப்தியடைவர் என்கிறார் முன்னாள் ஆளுநர் - News View

About Us

About Us

Breaking

Sunday, September 10, 2023

இலங்கை வருகிறது IMF அதிகாரிகள் குழு : முன்னேற்றம் தொடர்பில் திருப்தியடைவர் என்கிறார் முன்னாள் ஆளுநர்

(நா.தனுஜா)

விரிவாக்கப்பட்ட நிதி வசதிச் செயற்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கடனுதவி வழங்குவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்ட நிலையில், அது குறித்த முதலாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகளுக்காக எதிர்வரும் 14 ஆம் திகதி சர்வதேச நாணய நிதிய (International Monetary Fund - IMF) அதிகாரிகள் குழு இலங்கை வருகின்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதிச் செயற்திட்டத்தின் கீழ் சுமார் 3 பில்லியன் டொலர் கடனை இலங்கைக்கு வழங்குவதற்கான முன்மொழிவுக்குக் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை அனுமதியளித்தது.

அக்கடனுதவியின் நிமித்தம் சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை அரசாங்கம் உரியவாறு நிறைவேற்றியிருக்கின்றதா எனக் கண்காணிக்கும் முதலாம் கட்ட மதிப்பீடு எதிர்வரும் வாரம் நடைபெறவுள்ளது.

அதனை முன்னிட்டு எதிர்வரும் 14 ஆம் திகதி வியாழக்கிழமை இலங்கைக்கு வருகை தரவுள்ள சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு, இம்மாதம் 27 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்து முதலாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகளை முன்னெடுக்கவுள்ளனர். இம்மதிப்பீடானது கடந்த ஜுன் மாதம் வரையான பொருளியல் தரவுகளை அடிப்படையாகக் கொண்டே மேற்கொள்ளப்படவுள்ளது.

இம்மதிப்பீட்டு செயன்முறை தொடர்பில் ஏற்கனவே கருத்து வெளியிட்டிருந்த இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, 'சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழுவானது முதலாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகளுக்காக இலங்கைக்கு வருகை தருகின்றதே தவிர, நாம் ஏற்றுக் கொண்ட நிபந்தனைகள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றுவதற்கான கால எல்லை முடிவடைந்துவிட்டதாக இதனை அர்த்தப்படுத்த முடியாது. இம்மதிப்பீட்டின் பின்னர், நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கு எமக்கு மேலும் சில மாதங்கள் கால அவகாசம் உண்டு' என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் 'சர்வதேச நாணய நிதியத்தின் முதலாம் கட்ட மதிப்பீட்டுக்குரிய காலப்பகுதியில் நாம் ஓரளவு சிறந்த நிலையில் இருப்பதாகவே நான் கருதுகின்றேன். விரிவாக்கப்பட்ட நிதி வசதிச் செயற்திட்டத்தின் கீழான பல்வேறு கூறுகள் தொடர்பில் இலங்கைக்கு வருகை தரும் சர்வதேச நாணய அதிகாரிகள் குழுவினர் திருப்தியடைவர்' என்று இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

நாணயக் கொள்கை சார்ந்த விடயங்களில் இலங்கை மிகவும் சிறப்பாக செயலாற்றியிருப்பதுடன் நேர்மறையான போக்கைக் காண்பித்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், எண்ணியல் கணியங்களிலான இலக்குகள் அடையப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கடந்த ஓகஸ்ட் மாதம் 4 சதவீதம் என்ற மிகக்குறைந்தளவிலான பணவீக்கத்தைப் பதிவு செய்திருந்தது. கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் பதிவான 70 சதவீத பணவீக்கத்துடன் ஒப்பிடுகையில், தற்போது இலங்கை கணிசமானளவு முன்னேற்றத்தை அடைந்திருக்கின்றது என்பதே பொருளியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

எனவே எதிர்வரும் வாரம் ஆரம்பமாகவுள்ள முதலாம் கட்ட மதிப்பீட்டில் குறிப்பிடத்தக்க பிரச்சினைகள் எவையும் இருக்காது என்று எதிர்வுகூறியுள்ள முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி, இருப்பினும் கடன் மறுசீரமைப்புச் செயன்முறையில் முன்னேற்றம் அடையப்பட வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார்.

இருப்பினும் இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையிலான இணக்கப்பாடு எட்டப்பட்டு 5 மாதங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், செப்டெம்பர் மாத இறுதிக்குள் 71 நிபந்தனைகளைப் பூர்த்திசெய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருந்த போதிலும், கடந்த ஜுலை மாத இறுதி வரையான காலப்பகுதியில் 35 நிபந்தனைகள் மாத்திரமே பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக வெரிட்டே ரிசேர்ச் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நிஷான் டி மெல் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment