விழிப்புலனற்றோருக்கான முதலாவது வீதி சமிஞ்சை அமைச்சர் பந்துலவினால் திறந்து வைப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, September 1, 2023

விழிப்புலனற்றோருக்கான முதலாவது வீதி சமிஞ்சை அமைச்சர் பந்துலவினால் திறந்து வைப்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

வடக்கு, கிழக்கு மாகாணத்தில் பார்வையற்றோருக்கான வீதி சமிஞ்சை விளக்கு மட்டக்களப்பில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தனவினால் திறந்து வைக்கப்பட்டது.

கிராமிய கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் அழைப்பின் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் பந்துல குணவர்தன மட்டக்களப்பு கல்முனை நெடுஞ்சாலையில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நொச்சிமுனை பிரதான வீதியில் நிர்மாணிக்கப்பட்ட வீதி சமிஞ்சை விளக்கினை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட இவ்வீதி சமஞ்சை குறித்த பிரதேசத்தில் உள்ள விழிப்புலனற்றோரின் போக்கு வரத்துக்காக அமைக்கப்பட்டதாக அமைச்சர் அங்கு குறிப்பிட்டார்.

குறித்த இடத்தில் தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை மற்றும் உதயம் விழிப்புலனற்றோர் நிலையம் ஆகியன அமையப் பெற்றிருக்கின்றன. குறித்த நிலையங்களில் நூற்றுக்கணக்கான விழிப்புலனற்ற மாணவர்களும் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை வெள்ளைப்பிரம்பு பயன்படுத்தும் விழிப்புலனற்றோர் பிரயானஞ் செய்வதற்காக பொதுப் போக்குவரத்து பஸ் வண்டிகளை நிறுத்தும் பொழுது, குறித்த பஸ் வண்டி சாரதிகள் பஸ் வண்டியை நிறுத்துவது போன்று பாசாங்கு செய்து பஸ் வண்டியை நிறுத்தாமல், இவர்களை பஸ் வண்டியில் ஏற்றாமலும் சென்றுவிடுவதாக விழிப்புலனற்றவர்கள் போக்குவரத்து அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் பந்துல குணவர்தன, இலங்கையின் எப்பாகத்திலும் இவ்வாறான விசேட தேவையுடையவர்களை காணும் பொழுது பஸ் சாரதிகள் அவர்களை ஏற்றிச் செல்ல வேண்டும் அல்லது அவர்களுக்காக வழிவிட வேண்டும் என இலங்கைப் போக்குவரத்து சபை தலைவருக்கு பணிப்புரை விடுப்பதாகத் தெரிவித்தார்.

நிகழ்வுகளில் ராஜாங்க அமைச்சர்களான எஸ்.ரீ. பாலகம்லட், சி. சந்திரகாந்தன ஆகியோர் கலந்து கொண்டதுடன் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் உட்பட அதன் பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment