உண்மைகளை மறைப்பதற்கு மக்களின் குரலை ஒடுக்க முற்படாதீர்கள் : ஜனாதிபதியை வலியுறுத்தும் ஹர்ஷ டி சில்வா - News View

About Us

About Us

Breaking

Monday, September 25, 2023

உண்மைகளை மறைப்பதற்கு மக்களின் குரலை ஒடுக்க முற்படாதீர்கள் : ஜனாதிபதியை வலியுறுத்தும் ஹர்ஷ டி சில்வா

(எம்.மனோசித்ரா)

நாட்டை வங்குரோத்தடையச் செய்தவர்கள் தொடர்பில் மக்கள் பேசுவதை தடுப்பதற்காக அவர்களின் குரலை ஒடுக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை முற்றாக எதிர்ப்பதாகத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, இவ்வாறான ஒடுக்குமுறைகளுக்கு தயாராக வேண்டாம் என்றும் ஜனாதிபதியைக் கேட்டுக் கொண்டார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், இவ்வாறான விடயங்கள் தொடர்பில் மக்கள் பேசுவதை தடுப்பதற்காக நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இவ்வாறான ஒடுக்குமுறைகளுக்கு தயாராக வேண்டாம் என்று ஜனாதிபதியிடம் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பொதுஜன பெரமுனவினருடன் இணைந்து பழிகளை ஏனையோர் மீது சுமத்தி, மக்களின் குரலை ஒடுக்க முயற்சிப்பதை விடுத்து, எம்முடன் நேருக்குநேர் போராட வருமாறு ஜனாதிபதிக்கு சவால் விடுக்கின்றோம்.

அரசியலமைப்பு பேரவையின் ஊடாகவே ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படும். அவ்வாறு நியமிக்கப்பட்டால்தான் அவை ஓரளவேனும் சுயாதீனமாக செயற்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், நிகழ்நிலை காப்பு ஆணைக்குழுவானது நேரடியாக ஜனாதிபதியால் நியமிக்கப்படவுள்ளது.

இந்த ஆணைக்குழுவின் நியமனத்தில் அரசியலமைப்பு பேரவையின் எந்தவொரு தலையீடும் இல்லை. அதேபோன்று, உண்மைகளை தீர்மானிப்பதும் இந்தக்குழுவே எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறெனில் மஹிந்த சிறிவர்தன, அஜித் நிவாட் கப்ரால் ஆகிய இருவரில் யார் உண்மையைக் கூறுகின்றனர் என்பதை இந்தக் குழுவால் அறிய முடியுமல்லவா? அவ்வாறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால் அஜித் நிவாட் கப்ரால்தான் உண்மையைக் கூறுகின்றார் என்றே இந்த ஆணைக்குழு தெரிவிக்கும் என்றார்.

No comments:

Post a Comment