புத்தாண்டு வரை எரிவாயு விநியோகத்தில் எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது - லிட்ரோ நிறுவன தலைவர் - News View

About Us

About Us

Breaking

Monday, September 4, 2023

புத்தாண்டு வரை எரிவாயு விநியோகத்தில் எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது - லிட்ரோ நிறுவன தலைவர்

(இராஜதுரை ஹஷான்)

கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் உலக சந்தையில் எரிவாயுவின் விலை 100 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

லிட்ரோ நிறுவனத்தின் தலைமை காரியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் அவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், உலக சந்தையின் விலைக்கமைய எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டுமாயின் தேசிய மட்டத்தில் எரிவாயுவின் விலையை குறைந்தபட்சம் 980 ரூபாவால் அதிகரிக்க வேண்டும்.

கடந்த மாதம் எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளவில்லை. இந்த மாதம் உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிக்கக்கூடும் என்பதை உணர்ந்து வழமைக்கு மாறாக மேலதிகமாக எரிவாயு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

ஆகவே விலை அதிகரிப்பை நிறுவன மட்டத்தில் முகாமைத்துவம் செய்துகொண்டு 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 145 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு புத்தாண்டு காலப்பகுதி வரையான காலப்பகுதியில் எரிவாயு விநியோகத்தில் எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் கடந்த ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் மாத்திரம் சமையல் எரிவாயுவின் விலை 2000 ரூபா வரை கட்டம் கட்டமாக குறைக்கப்பட்டுள்ளது என்றார்.

எரிவாயு விலை சூத்திரத்துக்கமைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை திங்கட்கிழமை (4) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 12.5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவினாலும், 5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 58 ரூபாவினாலும், 2.3 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 26 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

புதிய விலை திருத்தத்துக்கமைய 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 3127 ரூபாவாகவும், 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 1256 ரூபாவாகவும், 2.3 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 587 ரூபாவாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment