நீதித்துறையை அச்சுறுத்தும் வகையில் நான் செயற்படுவதாக தொடர்ச்சியாக தவறான பிரசாரம் - சபாநாயகர் - News View

About Us

About Us

Breaking

Sunday, September 17, 2023

நீதித்துறையை அச்சுறுத்தும் வகையில் நான் செயற்படுவதாக தொடர்ச்சியாக தவறான பிரசாரம் - சபாநாயகர்

ஆர்.ராம்

சட்டவாக்கத்துறையின் தலைமை ஆசனத்தில் அமர்ந்து கொண்டு நீதித்துறையை அச்சுறுத்தும் வகையில் நான் செயற்படுவதாக தொடர்ச்சியாக தவறான பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ள சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, நிதித்துறையின் அதிகாரம் சாட்டவாக்கத்துறையிடம் உள்ளதோடு நாடு வங்குரோத்து அடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை பொறுப்புடன் முன்னெடுக்க வேண்டிய தேவை அத்துறையிடத்திலேயே உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினருடன் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின்போது, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு காணப்படுகின்ற சிறப்புரிமைகளால் அவர்கள் முன்னெடுக்கின்ற சில கருத்து வெளிப்பாடுகள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது. அந்த விடயத்தில் கவனத்தினைக் கொள்கின்றபோதும். சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பில் தீர்மானங்கள் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவிடத்தில், சட்டவாக்கத்துறை நீதித்துறையின் மீது தலையீடுகளைச் செய்து சுயாதீனத்தன்மையை கேள்விக்குட்படுத்துவதாக சட்டத்தரணிகளின் கூட்டிணைவு குற்றஞ்சாட்டி வருகின்றமை மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடனான சந்திப்பு
இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தினர் அண்மையில் அதன் தலைவர் தலைமையில் என்னுடன் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்கள். அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு காணப்படுகின்ற சிறப்புரிமைகளின் பெயரால் நீதிமன்ற தீர்ப்புக்கள் மட்டும் நீதித்துறையினர் மீது மேற்கொள்ளுகின்ற விமர்சனங்கள் தொடர்பில் கவனதிற்கு கொண்டு வந்தார்கள். அந்த விடயங்கள் தொடர்பில் கவனத்திற் கொள்வதோடு பாராளுமன்ற சிறப்புரிமைகள் பற்றிய தெரிவுக்குழுவின் கவனத்திற்கும் கொண்டு செல்வதாக குறிப்பிட்டிருந்தேன்.

அதேநேரம், 1948ஆம் ஆண்டின் பாராளுமன்ற சிறப்புரிமைகள் திருத்தச் சட்டத்தில் எவ்விதமான மாற்றங்களையும் செய்வது பற்றி எந்தவிதமான தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை. அவ்வாறான செயற்பாடு உடனடியாக சாத்தியமான நிலையிலும் இல்லை.

சுயாதீனத்தில் தலையிடுவது பற்றிய குற்றச்சாட்டுக்கள்
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான தீர்மானம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியதன் பின்னர் அது தொடர்பில் நீதிமன்றத்தினால் விசாரணைக்குட்படுத்த முடியாது என்றே எனது அறிவிப்பை வெளியிட்டேன்.

அந்த அறிவிப்பானது பலதரப்பட்ட ஆய்வுகளுக்கு மத்தியில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலானது ஆகும். குறிப்பாக, அநுர பண்டாரநாயக்க சபாநாயகராக இருந்தபோது, நீதியரசர் சரத் என் சில்வாவுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு தெரிவுக்குழுவொன்றை அமைப்பதற்கு முன்மொழியப்பட்டபோது அதற்கு அனுமதி வழங்கியுள்ளமை மிகச் சிறந்த முன்னுதாரணமாக உள்ளது.

இவ்வாறான நிலையில், நான் நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மையில் தலையீடுகளைச் செய்கின்றேன். அச்சுறுத்தல் விடுகின்றேன் என்ற தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்கள் தவறான பிரசாரங்களாகும். அந்தப் பிரசாரங்களை செய்யும் தரப்பினர் தம்மை நிலைநிறுத்திக் கொள்வதற்காக முன்னெடுகின்ற செயற்பாடாகவே பார்க்க வேண்டியுள்ளது.

மேலும், நாடு வங்குரோத்து நிலையை அடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுவிட்டது. வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்துவதில்லை என்ற அறிவிப்பு இன்னமும் நீடிக்கின்றது. இவ்வாறான நிலையில் நாட்டை பொருளாதார ரீதியில் மீட்டு எடுப்பதாக இருந்தால் அதற்குரிய நடவடிக்கைகளுக்கு பாராளுமன்றத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்விதமான செயற்பாடுகள் காணப்படவில்லை. மாறாக, பொருளாதார மீட்சிக்காக முன்னெடுக்கின்ற நடவடிக்கைளை தடுக்கும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுப்பது பொருத்தமானது அல்ல.

மேலும், நாட்டின் நிதி அதிகாரம் பாராளுமன்றத்திடத்தில் உள்ளது. நிதி சம்பந்தமான தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றபோது, அதில் பாராளுமன்றத்தின் வகிபாகம் பிரதான இடத்தினை வகிக்கிறது.

ஆகவே, நிதி தொடர்பான விடயங்களை முன்னெடுத்துச் செல்வதற்க பாராளுமன்றத்தின் அனுமதி அவசியமாகிறது. பராளுமன்றமே பொறுப்புக்கூற வேண்டியுள்ளது.

ஆகவே, அமைச்சரவையினால் முன்வைக்கப்படுகின்ற, நிறைவேற்றுத்துறையால் முன்வைக்கப்படுகின்ற விடயங்களுக்கு பாராளுமன்ற அனுமதி வழங்கப்படுகின்றமை தான் சம்பிரதாயமாக உள்ளது. அதனையே நானும் பின்பற்றியுள்ளேன்.

எனவே, அவ்விடயத்தினை தவறாக புரிந்து மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதே எனது நிலைப்பாடும் என்றார்.

No comments:

Post a Comment