(எம்.ஆர்.எம்.வசீம்)
2023ஆம் ஆண்டு ஆரம்ப 8 மாதங்களுக்குள் 200387இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். இவர்களில் 113635 ஆண் தொழிலாளர்கள் என்பதுடன் 86752 பேர் பெண் தொழிலாளர்களாகும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கையர்கள் அதிகமாக தொழில் நிமித்தம் சென்றிருப்பது சவூதி அரேபியாவுக்கு என்பதுடன் இதன் எண்ணிக்கை 44827 ஆகும்.
இரண்டாவதாக குவைட் நாட்டுக்கே அதிகமானவர்கள் தொழில் நிமித்தம் சென்றுள்ளனர். அதன் எண்ணிக்கை 39000 ஆகும்.
மூன்று மற்றும் நான்காவதாக கட்டார் மற்றும் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்துக்கே அதிகமானவர்கள் தொழில் நிமித்தம் சென்றிருக்கின்றனர். அதன் எண்ணிக்கை முறையே 34166 மற்றும் 25058 ஆகும்.
அத்துடன் ஐராேப்பிய நாடுகளுக்கு இலங்கையர்கள் தொழிலுக்காக அனுப்பப்படும் போக்கில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதுடன் அதன் பிரகாரம் 2023ஆம் ஆண்டு முதல் 8 மாதங்களுக்குள் ருமேனியாவுக்கு 9916 பேர் தொழில் நிமித்தம் சென்றுள்ளனர்.
அத்துடன் பயிற்சி மற்றும் தொழில் சேவைக்காக 152591 பேர் சென்றுள்ளதுடன் வீட்டு பராமரிப்பு உதவியாளர் பதவிக்காக 47796 பேர் மாத்திரமே சென்றுள்ளனர்.
மாவட்ட அடிப்படையில் பார்க்கும்போது தொழில் நிமித்தம் கொழும்பு மாவட்டத்தில் இருந்தே அதிகமானவர்கள் வெளிநாடு சென்றுள்ளனர். அதன் எண்ணிக்கை 22801ஆகும்.
கம்பஹா மாவட்டத்தில் இருந்து 20957 பேரும், கண்டி மாவட்டத்தில் இருந்து 19222 பேரும், குருணாகல் மாவட்டத்தில் இருந்து 17777 பேரும் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 11831 பேரும் வெளிநாடு சென்றுள்ளனர்.
2022ஆம் ஆண்டு 310967 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் பணியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment