அநியாயக்காரர்கள் நீங்கள்தான், நாங்களில்லை : கலையரசனுக்கு பதிலளித்துள்ள யஹியாகான் - News View

About Us

About Us

Breaking

Monday, September 25, 2023

அநியாயக்காரர்கள் நீங்கள்தான், நாங்களில்லை : கலையரசனுக்கு பதிலளித்துள்ள யஹியாகான்

நூருல் ஹுதா உமர்

தமிழ் - முஸ்லிம்கள் மத்தியில் பிரிவினைவாதத்தை தோற்றுவித்து அதில் குளிர்காய பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் எடுக்கும் முயற்சி மிகவும் கண்டனத்துக்குரியது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிப் பொருளாளர் ஏ.சி. யஹியாகான் குற்றம் சுமத்தியுள்ளார்.

கல்முனை - பாண்டிருப்பில், சென்ற சனிக்கிழமை நடந்த நிகழ்வொன்றில் உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன், தமிழ் - முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் உரையாற்றி இருந்தார்.

இவரின் இந்த கருத்துக்கு கடும் தொணியில் பதிலளித்துள்ள யஹியாகான் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, தேர்தலுக்காகவும், மீண்டும் தேசியப்பட்டியல் மூலமாக எம்பி பதவியை பெறுவதற்காகவும் சமுகங்களை பிரித்தாளும் கைங்கரியத்தை கலையரசன் போன்றோர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

அடுத்த பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் வெற்றி பெறப் போவதுமில்லை, தேசியப்பட்டியல் கிடைக்கப் போவதுமில்லை என்பதை நீங்கள் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். இதற்காக தமிழ், முஸ்லிம் சமுகங்களை கூறுபோட எடுக்கும் முயற்சிகள் கண்டனத்துக்குரியது.

தமிழ் மக்கள் அல்லது தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக / ஒன்றுபட்டு இல்லை என்பது உங்களைப் போன்றோரின் செயற்பாடுகளே அதற்குக் காரணமாக அமைந்திருந்தது.

முஸ்லிம் சமுகத்துக்கு பெரும் அநியாயங்களை செய்தது. உங்களைப் போன்றோரின் இவ்வாறான கடந்த கால இனவாத கருத்துக்கள்தான். நாங்கள் ஒருபோதும், தமிழ் சமுகம் வேதனைப்படும் வகையில் எங்கும் எப்போதும் கருத்துக்களை பிரதிபலித்தது கிடையாது.

இனப்பிரச்சினை தீர்வின்போது நியாயமான தீர்வு தமிழ் சமுகத்துக்கு கிடைக்க வேண்டும் என்றே அன்றும் இன்றும் வலியுறுத்தி வருகின்றோம்.

ஆனால், அவ்வாறான நியாயமான தீர்வில் முஸ்லிம் சமூகம் பாதிக்கப்படக்கூடாது என்று எங்கேயாவது ஓரிடத்தில் நீங்கள் கூறியிருக்கிறீர்களா ? இல்லை. ஒருபோதும் இல்லை.

அற்ப அரசியலுக்காக இன்னும் இன்னும் இரு சமுகங்களையும் பகடைக்காயாக பயன்படுத்த உங்களைப் போன்ற மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்கள் முயல்வது ஆரோக்கியமான விடயமல்ல என்றும் யஹியாகான் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment