தீர்மானிக்கப்பட்ட திகதியில் A/L பரீட்சை, பிற்போட முடியாது என்கிறார் கல்வி அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 5, 2023

தீர்மானிக்கப்பட்ட திகதியில் A/L பரீட்சை, பிற்போட முடியாது என்கிறார் கல்வி அமைச்சர்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

2023 கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் நவம்பர் 27ஆம் திகதி ஆரம்பிக்கப்படும். அதில் மாற்றம் செய்ய முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (5) நிலையியற் கட்டளை 27 இன் 2 கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பதிலளிக்கையில், இம்முறை கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி முதல் டிசம்பர் 21ஆம் திகதி வரை நடத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கிணங்க விடைத்தாள் திருத்தும் நடவடிக்கைகள் அடுத்த வாரத்திலேயே ஆரம்பிக்கப்படும்.

அதற்காக பாடசாலை விண்ணப்பதாரிகள் 268,625 பேரும் தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் 55,288 பேரும் விண்ணப்பித்துள்ளார்கள். அந்த வகையில் மொத்தமாக 3 லட்சத்து 23 ஆயிரத்து 913 பேர் விண்ணப்பித்துள்ளார்கள்.

கடந்த வருடத்தில் இந்த பரீட்சைக்காக 3 இலட்சத்து 31 ஆயிரம் பேர் தோற்றினார்கள். கடந்த வருடத்தை போன்று சமமான மாணவர்கள் இம்முறையும் விண்ணப்பித்துள்ளார்கள். அதனால் பரீட்சைக்கு மாணவர்கள் தயாராக இருக்கின்றார்கள் என்பதே இதன் மூலம் புரிந்துகொள்ள முடியும்.

அத்துடன் இம்முறை உயர்தரப் பரீட்சையை காலம் தாழ்த்தி ஜனவரி மாதத்தில் நடத்துமாறு சில தரப்பினர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். எனினும் அவ்வாறு காலதாமதம் செய்தால் மேலும் ஒரு மாத காலத்திற்கு பாடசாலை விடுமுறை வழங்க வேண்டிவரும். நவம்பரில் பரீட்சையை நடத்துவதன் மூலம் டிசம்பர் மாத விடுமுறை அதில் அடங்குவதால் மேலதிகமாக பாடசாலைகள் விடுமுறை வழங்க வேண்டி ஏற்படுவதில்லை.

அத்துடன் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகி உயர்தர கல்வியை தொடர்வதற்காக இந்த வருடம் 343 நாட்கள் பாடசாலை இடம்பெற்றிருக்கின்றன. அந்த காலப்பகுதிக்குள் உயர்தர பாடத் திட்டத்தை முடித்துக் கொள்ள முடியும். அதனை கருத்திற் கொண்டே உயர்தரப் பரீட்சையை நவம்பர் மாதம் 27ஆம் திகதி ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்தோம்.

எனவே நிர்ணயிக்கப்பட்ட திகதியில் உயர்தரப் பரீட்சையை நடத்துவதன் மூலம் மாணவர்களுக்கு எந்த அநீதியும் ஏற்படப்போவதில்லை என்றார்.

No comments:

Post a Comment