குற்றம் சுமத்தப்பட்ட பாதுகாப்பு பிரதானிகள் தனித்து செயல்படக்கூடாது : சனல் 4 காணொளியை ஆராய நியமிக்கப்படவுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு - News View

About Us

About Us

Breaking

Sunday, September 17, 2023

குற்றம் சுமத்தப்பட்ட பாதுகாப்பு பிரதானிகள் தனித்து செயல்படக்கூடாது : சனல் 4 காணொளியை ஆராய நியமிக்கப்படவுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு

(லியோ நிரோஷ தர்ஷன்)

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் குறித்து பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள ஆவணப்படம் தொடர்பாக ஆராய்வதற்காக விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவை இவ்வாரத்தில் நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இவ்வாறானதொரு குற்றம் சுமத்தப்பட்ட பாதுகாப்பு பிரதானிகள் மற்றும் அதிகாரிகள் தனித்து செயல்படக்கூடாது என்ற உத்தரவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பாதுகாப்பு சபைக் கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்றது. பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க உட்பட பாதுகாப்பு பிரதானிகள் கலந்துகொண்டிருந்தனர்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு உட்பட ஏனைய பாதுகாப்புத்துறை சார்ந்த விடயங்கள் குறித்து பரந்துபட்ட கலந்துரையாடல்களும் மீளாய்வுகளும் இதன்போது முன்னெடுக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதல்கள் குறித்து பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள ஆவணப்படத்தின் விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

செனல் 4 வெளிப்படுத்தல்களில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாதுகாப்புத்துறை சார்ந்த பிரதானி மற்றும் அதிகாரிகள் தனித்து செயற்படக்கூடாது.

இவ்வாறு செயற்படும் பட்சத்தில் அநாவசியமான நெருக்கடிகளும் தேசிய பாதுகாப்பு குறித்த சிக்கல்களுமே ஏற்படும். எனவே குற்றச்சாட்டுக்கு உட்பட அதிகாரிகள் தனித்து செயற்படக்கூடாது என்று இதன்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டார்.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான செனல் 4 இன் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்காக விசேட குழு நியமிக்க கடந்த வார பாதுகாப்பு சபைக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைவாக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ. இமாம் தலைமையில் ஓய்வு பெற்ற விமானப் படைத் தளபதி ஜயலத் வீரக்கொடி, ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ ஏ.ஜே. சோஸா ஆகியோரை உள்ளடக்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

மறுபுறம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள ஆவணப்படத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய்வதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழு இவ்வாரம் நியமிக்கப்படவுள்ளது.

இவ்வாரத்துக்காக பாராளுமன்ற அமர்வுகள் 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் மற்றும் செனல் 4 வெளிப்படுத்தல்கள் குறித்து விசேட விவாதங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இவ்வாறானதொரு நிலையில் ஜனாதிபதியின் ஆலோசணைக்கு அமைவாக பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்கும் நடவடிக்கையினை ஆளும் கட்சியின் முதற்கோலாசான் பிரசன்ன ரணதுங்க முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment