எல்லா சமூகங்களுடைய பிரச்சினைகளுக்கும் முடிந்த வரை தீர்வுகளை அடைவதற்கு பங்களிப்புச் செய்யக்கூடிய ஒரு ஆய்வு மையமாக சமூக நீதிக்கான கற்கை மையத்தை நகர்த்திச் செல்வதே இலக்கு - பிரதம நிறைவேற்று அதிகாரி சிராஜ் மஷ்ஹுர் - News View

About Us

About Us

Breaking

Thursday, August 31, 2023

எல்லா சமூகங்களுடைய பிரச்சினைகளுக்கும் முடிந்த வரை தீர்வுகளை அடைவதற்கு பங்களிப்புச் செய்யக்கூடிய ஒரு ஆய்வு மையமாக சமூக நீதிக்கான கற்கை மையத்தை நகர்த்திச் செல்வதே இலக்கு - பிரதம நிறைவேற்று அதிகாரி சிராஜ் மஷ்ஹுர்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் மாத்திரமல்லாது எல்லா சமூகங்களுடைய பிரச்சினைகளுக்கும் முடிந்த வரை தீர்வுகளை அடைவதற்கு பங்களிப்புச் செய்யக்கூடிய ஒரு ஆய்வு மையமாக சமூக நீதிக்கான கற்கை மையத்தை நகர்த்திச் செல்வதே தமது இலக்கு என்று அந்த அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி சிராஜ் மஷ்ஹுர் தெரிவித்தார்.

“13 ஆவது திருத்தமும், அதற்கு அப்பாலும்: முஸ்லிம் சமூகத்திற்கான அரசியல் தீர்வினை நோக்கி" என்ற தலைப்பிலான ஆய்வரங்கம் புதனன்று (30.08.2023) வெள்ளவத்தை பெண்கள் கல்வி மற்றும் ஆய்விற்கான மையத்தில் (WERC) நடைபெற்றது.

சமூக நீதிக்கான கற்கை மையத்தின் (Academy for Social Justice) ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இவ்வாய்வரங்கில், முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பல்வேறு சமூக - அரசியல் செயற்பாட்டாளர்கள், மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள், கல்வியலாளர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ஆய்வரங்கை நெறிப்படுத்திய சமூக நீதிக் கட்சியின் தலைவர் நஜா முஹம்மத், 'சமூக நீதிக் கட்சியின் ஆய்வுப் பிரிவாக செயல்படும் சமூக நீதிக்கான கற்கை மையம், கட்சி அரசியலுக்கு அப்பால் பரந்துபட்ட தளத்தில் சகலரையும் உள்வாங்கி செயற்படும் ஒரு பொதுத் தளமாக அமைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. எனவே மிகுந்த நம்பிக்கையோடு சமூக நீதிக்கான கற்கை மையத்தின் செயல்பாடுகளை முன்னோக்கி நம்பிக்கையோடு நகர்த்த முடியும் என்ற உத்வேகத்தை தந்துள்ளது” என்றார்.
சிரேஷ்ட சட்டத்தரணி பஹீஜ், 13 ஆம் திருத்தச் சட்டம் மற்றும் அதன் முழு அமுல்படுத்தலில் முஸ்லிம் சமூகத்திற்கு உள்ள சாதக பாதகங்கள் குறித்து அறிமுக உரையை நிகழ்த்தினார்.

இவ்வாய்வரங்கத்தில் கொழும்பு பல்கலைக்கழக அரசியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும் ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கான முன்னாள் தூதருமான கலாநிதி அனீஸ் ஷரீப், கிண்ணியா மஜ்லிஸ் சூறாவின் செயலாளரும் ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற பதிவாளருமான நியாஸ், மாகாண சபை முன்னாள் உறுப்பினர் யூ.எல்.எம்.முபீன், பாராளுமன்ற சிரேஷ்ட ஆய்வாளர் அஜ்வதீன், ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எம்.சுஹைர், சிரேஷ்ட சட்டத்தரணியும் முன்னாள் அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினருமான ஜாவித் யூஸ{ப், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் உட்பட இன்னும் பல துறைசார் புத்திஜீவிகள் கலந்து கொண்டர்.

இவ்வரங்கத்தில் 13 ஆவது திருத்தச் சட்டம் குறித்து முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாட்டிற்கான தேவையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, ஆய்வரங்கத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள், அறிக்கையாக வெளியிடப்படல் வேண்டும் என்றும் முடிவு தீர்மானிக்கப்பட்டது.

No comments:

Post a Comment