எதிர்காலத்தில் மதத்தினால் குழப்பம் ஏற்படுத்தப்படாமல் வழிநடத்த வேண்டும் : சமயத் தொண்டர்கள், புத்திஜீவிகள் அரசியலை நாடக்கூடாது - ஜெயம் சாரங்கபாணி - News View

About Us

About Us

Breaking

Monday, July 31, 2023

எதிர்காலத்தில் மதத்தினால் குழப்பம் ஏற்படுத்தப்படாமல் வழிநடத்த வேண்டும் : சமயத் தொண்டர்கள், புத்திஜீவிகள் அரசியலை நாடக்கூடாது - ஜெயம் சாரங்கபாணி

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

எதிர்காலத்தில் மதத்தின் மூலமாக ஒரு குழப்பம் ஏற்படுத்தப்படாமல் புத்திஜீவிகள், பத்திரிகையாளர்கள், ஆன்மீகத் தலைவர்கள் சமாதானமாக வழிநடத்த வேண்டும் என மிஸ்பா ஜெப மிஷனரி ஊழியத்தின் ஸ்தாபகரும், போதகரும், சுவிசேஷகருமான சகோ. ஜெயம் சாரங்கபாணி தெரிவித்தார்.

கிழக்கு ஊடக மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை (30.07.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், நான்கு இன மக்கள் மூன்று பாசை பேசுகின்றோம். சிங்கள மக்கள் இந்த இலங்கையை அவர்கள் ஆள வேண்டும் என்று விரும்புகின்றார்கள். அவர்களுடன் நாம் ஒன்றிணைந்து கடவுளின் பிள்ளைகளாக சமாதனத்துடன் எங்கள் பிரதேசங்களில் நாங்கள் அதிகாரத்துடன் வாழ பிரார்த்தனை செய்கின்றோம்.

இஸ்லாமிய மக்களும் எம்சகோதரர்களே. நாங்கள் இஸ்லாமியர்களை நம்புகின்றோம். இஸ்லாமியர்களும் எங்களை நம்ப வேண்டும். அதேபோன்று சிங்கள மக்களும் எங்களோடு சேர்ந்து பணி செய்ய வேண்டும். நாங்கள் பிரிந்து வாழ விரும்பவில்லை. அனைவரும் சகோதரர்களாக இருந்தால் இலங்கை கட்டியெழுப்பப்படும். இந்த மட்டக்களப்பு மாவட்டத்திலே மூவின மக்களும் புட்டும் தேங்காய்ப்பூவும் போல இணைந்து வாழ்கின்றார்கள்.

இதற்காகவே இறைவனுடைய தூதை நாங்கள் கொண்டு வருகின்றோம். இறைவல்லமையுடன் இந்த தேசம் கட்டப்பட வேண்டும். விசேடமாக மட்டக்களப்பை கடவுள் ஆசீர்வதிக்க இருக்கின்றார். நிச்சயம் கிழக்கு மாகாணம் கடவுளின் ஆசீர்வாதத்திற்கு உட்பட்டே ஆகும். தென்னிலங்கையும், வட பகுதியும் இறைவன் பக்கம் முழுமையாகத் திரும்ப வேண்டும். எங்கள் மூலம் கடவுள் இந்த இலங்கை முழுவதும் சமாதானத் தூதை விதைக்கின்றார்.

விசேடமாக இந்த நாட்டிலே ஊடகவியலாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். எத்தனையோ பேர் கைது செய்யப்பட்டும் கொலை செய்யப்பட்டும் இருக்கின்றார்கள். எத்தனையோ பேர் காணாமல் ஆக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்தத் தூதைக் கொண்டு அவர்களுக்குப் பாதுகாப்பைக் கொடுக்க வேண்டும் என்று ஊடகவியலாளர்களுக்காகவும் நாங்கள் பிரார்த்தனையிலே ஈடுபடுவோம்.

பிரார்த்தனையின் மூலம் அனைத்த இனங்களையும் ஒரே இடத்திற்குக் கொண்டு வர வேண்டும். இதனை நாங்கள் 42 வருடங்களாக மேற்கொண்டு வருகின்றோம். 

எங்களது சமூக சேவையை நாங்கள் கிளிநொச்சி, முள்ளியவளை, பலாங்கொடை, நாவலப்பிட்டி போன்ற பிரதேசங்களில் மேற்கொண்டுள்ளோம். விசேடமாக யுத்தத்தினால் பாதிப்புற்ற பகுதிகளில் முன்பள்ளிச் சிறார்களுக்கான இலவச கல்விச் செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம். கணவனை இழந்த பெண்களுக்கான தையல் பயிற்சிகள் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். வருமானம் குறைந்த கும்பங்களைச் சேர்ந்த குழுந்தைகள் 400 பேரைத் தெரிவு செய்து அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் உணவு வழங்கி வருகின்றோம்.

அத்துடன் 25 குடும்பங்களிலுள்ள பிள்ளைகளைத் தெரிவு செய்து அவர்களது உயர்தரம் வரையான கல்விச் செலவுகளை நாங்கள் பொறுப்பெடுத்திருக்கின்றோம். கர்ப்பிணித் தாய்மாருக்கான போசாக்கு வழங்கும் செயற்திட்டங்களையும் மேற்கொண்டுள்ளோம். அதேபோன்று கைவிடப்பட்ட உறவுகளுக்கும் எம்மாலான உணவு உதவிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

தற்போது எமது பணிகள் வாகரையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அடுத்த வருடங்களில் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியாவில் முன்னெடுக்க இருக்கின்றோம்.

சமயத் தொண்டர்கள், புத்திஜீவிகள் அரசியலை நாடக்கூடாது. அரசியல் மக்களால் தெரிவு செய்யப்படுகின்றது. ஆன்மீகம் இறைவனால் தெரிவு செய்யப்படுகின்றது. அரசியலுக்குரியவர்கள் இந்த 13 வது திருத்தம் தொடர்பில் மக்களுக்கான விடயங்களை ஆராய்ந்து செயற்படுத்துவார்கள். நாங்கள் எங்களது பிரார்த்தனை மூலமாக மக்களுக்கான நியாயமான விடயங்கள் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திப்போம்.

இங்கு 13 என்பதற்குள் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கு உகந்ததான விடங்கள் வர வேண்டும் என்பதே எங்கள் பிரார்த்தனை. நடந்தவை முடிந்துவிட்டன, அதிகாரங்கள் பகிர்ந்து கொடுக்கப்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment