உணவுப் பாதுகாப்பு தொடர்பான கொள்கை வரைபு : தேசிய பேரவையின் உப குழுவில் சமர்ப்பிக்கப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Sunday, July 30, 2023

உணவுப் பாதுகாப்பு தொடர்பான கொள்கை வரைபு : தேசிய பேரவையின் உப குழுவில் சமர்ப்பிக்கப்பட்டது

உணவுப் பாதுகாப்பு (விவாசயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடி) தொடர்பான கொள்கை வரைபு குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழுவில் சமர்ப்பிக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் கூடிய குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழுவில் இந்த வரைபு சமர்ப்பிக்கப்பட்டது.

உணவுப் பாதுகாப்பிற்கான தேசிய கொள்கையொன்றைத் தயாரிக்கும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன தலைமையில் செயற்குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்ததுடன், இந்தக் குழு சுமார் எட்டு மாதங்களுக்கு மேலாகக் கூடி ஆராய்ந்து இந்தக் கொள்கைக் கட்டமைப்பைத் தயாரித்துள்ளது.

நீர்ப்பாசன அமைச்சு, கமத்தொழில் அமைச்சு, கடற்றொழில் அமைச்சு, சுற்றாடல் அமைச்சு, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு, சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சு, வனசீவராசிகள் மற்றும் வன வளப் பாதுகாப்பு அமைச்சு, கல்வி அமைச்சு, வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு உட்பட அமைச்சுக்களின் செயலாளர்கள், வடமேல்மாகாண விவசாய அமைச்சு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, உணவு மற்றும் விவசாய அமைப்பு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்ட வரைவுத் திணைக்களம் உட்பட பல்வேறு நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள் இணைந்து இதனைத் தயாரித்துள்ளனர்.

நாட்டுக்குத் தேவையான உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான குறுகிய கால, நீண்ட கால யோசனைகள் பல இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

உணவுப் பாதுகாப்பிற்கான கருத்தியல் கொள்கைக் கட்டமைப்பை தேசிய பேரவையில் சமர்ப்பித்து அதன் ஊடாக பாராளுமன்றத்திற்கு இது சமர்ப்பிக்கப்படும் என குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழுவின் தலைவர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

எதிர்காலத்தில், சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கு அறிவிக்கப்பட்டு, நிறுவன ஏற்பாடுகளை ஒதுக்கீடு செய்வதற்கு தேவையான சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான அசங்க நவரத்ன, சாகர காரியவசம் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment