சொந்த நாட்டிலேயே வழிபாட்டுரிமை மறுக்கப்படும் அவலம் : எத்தகைய கொடிய அரசின் கீழ் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பதை உலக நாடுகள் பார்க்க வேண்டும் - ரவிகரன் - News View

About Us

About Us

Breaking

Saturday, July 15, 2023

சொந்த நாட்டிலேயே வழிபாட்டுரிமை மறுக்கப்படும் அவலம் : எத்தகைய கொடிய அரசின் கீழ் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பதை உலக நாடுகள் பார்க்க வேண்டும் - ரவிகரன்

எங்களுடைய இடத்தில், எமது மக்கள், தமது வழிபாட்டினை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது எனவும், குருந்தூர் மலையில் தமிழ் மக்களுடைய வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் எத்தகைய கொடிய அரசின் கீழ் எமது தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள் என்பதை உலக நாடுகள் பார்க்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், பௌத்த பிக்குகளும், பெரும்பான்மை இனத்தவர்களும் பெருமளவில் குருந்தூர் மலைப் பகுதிக்கு வருகை தந்திருந்தனர்.

நாம் பொங்கல் வழிபாடுகளுக்குரிய செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தபோது, பெரும்பான்மை இனத்தவர்களும், பௌத்த தேரர்களும் எமது பொங்கல் வழிபாட்டுக்குரிய செயற்பாடுகளைக் குழப்புகின்ற வகையில் செயற்பட்டனர்.

இந்நிலையில் அங்கு கடமையிலிருந்த பொலிசார் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததை அவதானிக்கக் கூடியவாறு இருந்து.

இந்நிலையில் குறித்த இடத்திற்கு வருகை தந்த தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் நாம் பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு சில நிபந்தனைகளை விதித்திருந்தனர்.

அந்த வகையில் தொல்லியல் பிரதேசத்திற்குள் 'தீ' வைக்க முடியாது எனக்கூறிய தொல்லியல் திணைக்கள அதிகாரிகள், நிலத்திலே கற்களை வைத்து பின்பு தகரங்களை வைத்து, அதன் மேல் கற்களை வைத்து, கற்களின் மேல் பானை வைத்து தீ வைத்து பொங்கல் மேற்கொள்ள முடியுமென்ற நிபந்தனைகளுடன் பொங்கல் வழிபாட்டிற்கு அனுமதித்திருந்தனர்.

இந்நிலையில் தொல்லியல் திணைக்களத்தினுடைய நிபந்தனைகளுக்கு அமைவாக, பொங்கல் மேற்கொள்வதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபட்டோம். அப்போதும் அங்கிருந்த பெரும்பாண்மை இனத்தவர்களாலும், பௌத்த தேரர்களாலும் அங்கு எமது பொங்கல் வழிபாடுகளுக்கு குழப்பம் ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில் பௌத்த தேரர்களுக்கும், பெரும்பான்மை இனத்தவர்களுக்கும் ஆதரவாகவே பொலிசாருடைய செயற்பாடுகள் காணப்பட்டன. பொலிசாருடைய செயற்பாடுகள் மிக மோசமாக காணப்பட்டன.

எங்களுடைய இடத்தில், எமது மக்கள், தமது வழிபாட்டினை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது. எமது மக்களின் வழிபாட்டுரிமை இங்கு மறுக்கப்பட்டது.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து பல தடவைகள் இந்த நாட்டிலே நடைபெற்றிருக்கின்றன. இருப்பினும் சர்வதேச நாடுகள்கூட தொடர்ந்தும் இவற்றை வெறுமனே பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றன.

இவ்வாறான கொடுமையான அரசாங்கத்தின் கீழ்தான் எமது மக்கள் வாழ்கின்றார்கள் என்பதை இந்த உலக நாடுகள் பார்க்க வேண்டும்.

இங்கே பொலிசார் எமது தமிழ் மக்களுடன் தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர். எமக்கெதிராக அடக்கு முறைகளைக் கையாண்டனர் ஆனால் பௌத்த துறவிகளுக்கு எதிராகவோ, பெரும்பான்மை மக்களுக்கு எதிராகவோ அவர்கள் அடக்கு முறைகளைக் கையாளவில்லை.

எம்மால் இங்கு பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ள முடியவில்லை. ஆனாலும் நாம் இதனை இவ்வாறே விட்டுவிடப் போவதில்லை. நாம் தொடர்ந்தும் இங்கு வந்து எமது வழிபாடுகளை மேற்கொள்வோம் என்றார்.

No comments:

Post a Comment