(எம்.வை.எம்.சியாம்)
சர்வ கட்சி மாநாட்டில் அதிகாரப்பகிர்வு நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது. நாட்டின் அனைத்து மக்களும் சம உரிமையுடன் வாழ வேண்டும். நாட்டில் சுமுகமான நிலை இருக்கும்போதே இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதனை மேற்கொள்ள சரியான நேரம் இதுவல்ல என எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை (28) பிற்பகல் அநுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்தபோது சர்வ கட்சி மாநாடு மற்றும் அதிகார பகிர்வு தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, சர்வ கட்சி மாநாட்டில் அதிகாரப்பகிர்வு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. எவ்வாறு அதிகாரப்பகிர்வை மேற்கொள்வது? அல்லது எந்த சந்தர்ப்பத்தில் அதை செயல்படுத்துவது என்பது தொடர்பில் சிந்தித்து, நிதானமாக செயல்பட வேண்டிய தருணத்தில் இருக்கிறோம்.
நாட்டின் அனைத்து மக்களும் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். அதுவே எனது நிலைப்பாடாகும். நாட்டில் சுமுகமான நிலை இருக்கும்போதே இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட வேண்டும்.
நாட்டில் நெருக்கடி நிலை காணப்படும்போது இவ்வாறான பிரச்சினைகளை எடுத்துக் கொள்ளும்போது இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் தரப்பினர் பலர் உள்ளனர். அது அவர்களுக்கு சாதகமாக மாறி விடும். இதற்கு முன்னரும் இவ்வாறு இனவாத செயற்பாட்டை கொண்டே சிலர் ஆட்சிக்கு வந்தனர். இதனை செய்வதற்கு சரியான நேரம் இதுவல்ல என நான் நினைக்கிறேன். இருப்பினும் அதற்கான நியாயம் வழங்கப்பட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment