கடந்த காலங்களில் விமானப் பயணங்கள் தாமதமடைந்தமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் விமானிகள் ஒன்றியம் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது.
ஏற்பட்ட பாரிய சிக்கலானது விமான நிறுவனத்தின் முகாமைத்துவத்தினால் தீர்க்கப்படாமையே இதற்கான காரணம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் விமான சேவையில், கடமையில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர் நோய்வாய்ப்பட்டமையினால் விமானத்தை இயக்குவதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில், சம்பவத்திற்கு காரணமான விடயங்கள் தொடர்பில் விமானிகள் ஒன்றியத்தால் அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் விமான சேவையை முழுமையான செயற்றிறனுடன் இயக்குவதற்கு 330 விமானிகள் தேவையாகவுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும், 2022 ஆம் ஆண்டு முதல் அவர்களில் 70 இற்கும் அதிகமானோர் சேவையிலிருந்து விலகியுள்ளதுடன், மேலும் பலர் பதவி விலகும் எதிர்பார்ப்பில் உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உரிய நேரத்தை விடவும் 12 மணித்தியாலங்களுக்கு பின்னர் புறப்பட்ட விமானத்துடன் தொடர்புபடுத்த தயாராகவிருந்த விமானி இல்லாமை காரணமாக, கடந்த காலங்களில் இந்த பாரிய நெருக்கடியை காணக்கூடியதாக இருந்ததாக விமானிகள் ஒன்றியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில், விமான நிறுவனத்தின் அனைத்து தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டுமெனவும் முன்வைக்கப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கான தீர்வு வழங்கப்பட வேண்டுமெனவும் விமானிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment