(எம்.மனோசித்ரா)
தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் திடீரென அதன் முடிவுகளை மாற்றிக் கொண்டுள்ளமைக்கான காரணம் என்ன என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அரசாங்கம் ஏன் தனது நிலைப்பாட்டை மாற்றியமைத்தது என்பதை உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
கடந்த காலங்களில் ஜனாதிபதி, நிதி இராஜாங்க அமைச்சர் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் ஆகியோர் சர்வதேச நாணய நிதியத்தின் தேவைகளுக்கமைய, தேசிய கடனை மறுசீரமைக்க மாட்டோம் என தொடர்ச்சியாக கூறி வந்தனர்.
அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு தற்போது உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புக்கான முன்மொழிவுகளை முன்வைப்பது ஒரு பாரதூரமான பிரச்சினையாகும்.
இலங்கையை வங்குரோத்து நாடாக பிரகடனப்படுத்துவதற்கு முன்னரே, இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி பரிந்துரைத்தது.
உரிய நேரத்தில் உரிய முறையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது என்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் நம்பிக்கையாகும்.
அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் மிகவும் கோழைத்தனமான மற்றும் நேர்மையற்ற விதத்திலேயே பேச்சுவார்த்தை நடத்தியதை இந்த முடிவு தெளிவாக்குகிறது. சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் மிகவும் பலவீனமான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் நாடும் மக்களும் ஆபத்தில் சிக்கியிருப்பது தெளிவாகிறது.
சர்வதேச நாணய நிதியத்துடனான அதிகாரிகள் மட்ட உடன்படிக்கையையோ அல்லது இணக்கப்பாட்டையோ கூட பாராளுமன்றத்தில் முன்வைக்காமல் இரகசியமாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளிலும் செயல்முறையிலும், நாட்டுக்கும் மக்களுக்கும் ஒன்றை சொல்லிவிட்டு முற்றிலும் மாறுபட்ட போக்கை கடைபிடிப்பதைத்தான் அரசாங்கம் செய்துள்ளது. தேசிய கடன் மறுசீரமைப்பு குறித்த திட்டத்தில் இருந்து இது நன்கு தெளிவாகிறது.
சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, உலகின் பல நாடுகள் தங்கள் உள்நாட்டுக் கடனை மறுசீரமைக்காமல் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறும் வகையில் செயற்பட்டன. முறையான உபாயங்களை பின்பற்றாததாலும் சரியான நேரத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படாததாலும் இலங்கைக்கு அதற்கான சந்தர்ப்பம் கிடைக்காமல் போனது.
தேசிய கடன் மறுசீரமைப்பு முன்மொழிவில், எதிர்காலத்தில் நாடு பாரிய பிரச்சினைக்கு உள்ளாகும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம். அரசாங்கம் தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றுவதை விட்டுவிட்டு நாட்டுக்கு உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும்.
No comments:
Post a Comment