கடன் தவணைகளை செலுத்த சட்ட ரீதியில் நிவாரண காலம் அமைத்துக் கொடுக்க வேண்டும் - ரவூப் ஹக்கீம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 7, 2023

கடன் தவணைகளை செலுத்த சட்ட ரீதியில் நிவாரண காலம் அமைத்துக் கொடுக்க வேண்டும் - ரவூப் ஹக்கீம்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

சர்வதேச நாணய நிதியத்தின் தலையீட்டின் மூலம் நாடு பெற்றுக் கொண்ட கடன் தவணைகளை அந்தக் காலத்தில் வழங்காமல் இருப்பதற்கு நிவாரண காலம் கிடைக்கப் பெற்றதுபோல் கைத்தொழில்களில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்களுக்கும் அவர்கள் பெற்றுக் கொண்டுள்ள கடன் தவணைகளை வங்கிகளுக்கு வழங்க நிவாரண காலம் ஒன்றை சட்ட ரீதியில் அமைத்துக் கொடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (7) இடம்டைபெற்ற சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறை எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டின் பொருளாதாரம் கொவிட் தொற்று, ஈஸ்டர் தாக்குதலை தொடர்ந்து பாரிய நெருக்கடிக்கு ஆளாகி வங்குராேத்து நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இதனால் சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் வீழ்ச்சியடைந்திருப்பது தொடர்பில் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

குறிப்பாக வங்கிக் கடன் தொடர்பாக, கடன் மீளச் செலுத்த முடியாமல் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் எதிர்பார்க்கும் நிவாரணம் தொடர்பாகவும் வங்கிகள் அந்த கடனை மீளப் பெற்றுக் கொள்ள எடுக்கும் நடவடிக்கை தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

அத்துடன் நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்தமையால் சர்வதேச நாணய நிதியத்தின் தலையீட்டின் மூலம் நாட்டுக்கும் சில நிவாரணம் கிடைத்தது.

ஏனெனில் நாடு பெற்றுக் கொண்ட கடன் தவணைகளை அந்தக் காலத்தில் வழங்காமல் இருப்பதற்கு நிவாரண காலம் கிடைக்கப் பெற்றதால், அந்த காலத்தில் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்துகொள்ள சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தை நாங்கள் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கும் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

அதற்காக வங்கிகளுக்கு வழங்க வேண்டிய கடன் தவணையை தொழிற்சாலைகள் சிறிது காலத்தில் வழங்க முடியுமான வகையில் நாங்கள் சட்ட ரீதியில் அமைத்துக் கொடுக்க வேண்டும்.

அத்துடன் கண்டி மாவட்டத்தின் குண்டசாலை தொகுதியில் பாரம்பரிய கைத்தொழில்களில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்கள் மற்றும் நாடு பூராகவும் இவவாறான கைத்தொழில்களில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்களின் நிலை இன்று மிகவும் கவலைக்குரிய நிலையே காணப்படுகிறது.

இவர்களின் உற்பத்தி பொருட்களை நேரடியாக கொள்வனவு செய்துவந்த லக்சல போன்ற நிறுவனங்கள் தற்போது அதனை நிறுத்தியுள்ளதால், இடைத்தரகர்கள் சிலர் தங்களின் நன்மைக்காக இதனை திருப்பிக் கொண்டிருக்கிறனர்.

அதேநேரம் தங்களிடம் பல வருடங்களாக பெற்றுக் கொண்ட உற்பத்தி பொருட்களுக்கான பணத்தை லக்சல நிறுவனம் இதுவரை வழங்காமல் இருப்பதாகவும் கைத்தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே பல்வேறு கைத்தொழிலாளர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி, அவர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment