(எம்.மனோசித்ரா)
பாராளுமன்றத்தில் இவ்வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் பல்வேறு குறைபாடுகளைக் கொண்டுள்ளது. எனவே எம்மால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் உள்ளடக்கப்படாவிட்டால் குறித்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாட்டு ஒப்பந்தத்துக்கமைய ஊழல் ஒழிப்பு சட்டமூலம் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இவ்வாரம் பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் இது குறித்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டை வினவியபோதே அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தில் மக்கள் எதிர்பார்த்த பல விடயங்களை அரசாங்கம் நீக்கியுள்ளது. எனவே தற்போது காணப்படும் சட்டமூலத்தை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. இது தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாட வேண்டியுள்ளது.
எமது நாட்டிலிருந்து கொள்ளையடித்துச் செல்லப்பட்ட பணம், சொத்துக்கள் என்பவற்றை மீளப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடு இந்த சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட வேண்டும்.
அதேபோன்று இதனுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும். எனினும் இது தொடர்பான எந்தவொரு ஏற்பாடுகளும் இந்த சட்டமூலத்தில் இல்லை. எமது நிலைப்பாட்டை நாம் அறிவித்திருக்கின்றோம்.
இந்த சட்டமூலம் முழுமையானதல்ல. எனவே தற்போதுள்ள குறைபாடுகளை நீக்கி அதனை சமர்ப்பிக்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றோம். அவ்வாறில்லை எனில் இதற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்காது என்றார்.
No comments:
Post a Comment