(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் வீண் விரயங்கள் கிடையாது என எவராலும் கூற முடியாது. இது நாம் முகம் கொடுக்கும் பாரிய பிரச்சினையாகும். அதனால் அரச திணைக்களங்கள், நிறுவனங்களின் வீண் விரயங்களை கட்டுப்படுத்த முன்னுரிமையளித்து செயற்படுவது அவசியமாகும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்ற பாாரளுமன்ற வரவு செலவு திட்ட அலுவலகம் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாம் சமர்ப்பிக்கும் சில புள்ளி விபரங்கள் மற்றும் தகவல்கள் முறையற்றதாயின் அதன் மூலமான வீண்விரயம் விசாலமானது என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த வீண் விரயங்களை குறைத்துக் கொள்வதே எமது இலக்காகும். அதனை முக்கியமான இலக்காகக் கொண்டு அதற்கு முன்னுரிமையளித்து நாம் செயற்பட வேண்டியது அவசியமாகும்.
யார் என்ன சொன்னாலும் திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் வீண் விரயங்கள் கிடையாது என எவராலும் கூற முடியாது. இது நாம் முகம் கொடுக்கும் பாரிய பிரச்சினையாகும்.
சில புள்ளி விபரங்களில் காணப்படும் பிழைகள் மற்றும் அதிலிருந்து திசை திருப்பும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மோசடிகள் குறிப்பிடத்தக்கவை. இவ்வாறான மோசடிக்காரர்களின் சுமையையும் இறுதியில் திறைசேரி அல்லது பாராளுமன்றத்திற்கே பொறுப்பேற்க வேண்டியுள்ளது. அது பொதுமக்களுக்கான பாரிய பாதிப்புகளுக்கே வழிவகுக்கும்.
அதனால் அவற்றிலிருந்து மீளும் பொறிமுறையாக வரவு செலவு திட்ட அலுவலகத்தின் செயற்பாடுகள் அமைகின்றன. அது தொடர்பில் பல சரத்துக்கள் காணப்படுகின்றன. கடந்த காலங்களில் இது போன்ற அலுவலகங்களை உருவாக்குவதில் எமது ஒத்துழைப்புக்களை நாம் தொடர்ந்து வழங்கி வந்துள்ளோம்.
சுயாதீனமாக செயற்படும் அதிகாரிகள் மூலம் உருவாக்கப்படும் இத்தகைய அலுவலகங்கள் சுயாதீனமாகவே செயற்படும் என நம்பிக்கை கொள்ளலாம். இதனை நிறைவேற்றிக் கொள்வதற்கு நாம் அனைவரும் இணக்கப்பாட்டுடன் செயல்படுவது அவசியமாகும் என்றார்.
No comments:
Post a Comment