தன்னிச்சையாக செயற்பட முற்படுவது அரச பயங்கரவாதமாகும் - உதய கம்மன்பில - News View

About Us

About Us

Breaking

Monday, June 26, 2023

தன்னிச்சையாக செயற்பட முற்படுவது அரச பயங்கரவாதமாகும் - உதய கம்மன்பில

(எம்.ஆர்.எம்.வசீம்)

அரசாங்கம் தேசிய கடன் மறுசீரமைப்பு செய்வதாக இருந்தால் பாராளுமன்றம் மற்றும் கடன் உரிமையாளர்களுடன் கலந்துரையாடியே மேற்கொள்ள முடியும். அவ்வாறு இல்லாமல் தன்னிச்சையாக செயற்படுமாக இருந்தால் அதனை அரச பயங்கரவாத செயலாகவே நாங்கள் காண்கிறோம் என பாராளுமன்ற உறுப்பிர் உதய கம்மன்பில தெரிவித்தார்,

பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (26) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், தேசிய கடன் மறுசீரமைப்பு மேற்கொள்வதில்லை என்றே அரசாங்கம் ஆரம்பத்தில் தெரிவித்து வந்தது. ஆனால் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தம் காரணமாகவே அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தற்போது மாற்றிக் கொண்டுள்ளது.

ஏனெனில் தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தில் எங்கும் தெரிவிக்கப்படவில்லை. மாறாக பொருளாதாரத்தை ஸ்திரமான நிலையில் வைத்திருப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவே அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. அதனால் இதற்கு மாற்று வழி எடுத்த கடனை நீக்கிக் கொள்வதல்ல.

அத்துடன் அரசாங்கம் அவ்வாறு தேசிய கடன் மறுசீரமைப்பு மேற்கொள்வதாக இருந்தால் வங்கிகளுடன் கடன் உரிமையாளர்களுடன் கலந்துரையாடி எடுத்த கடனை செலுத்தும் கால எல்லையை நீடித்துக் கொள்ள முடியும். அல்லது வட்டி வீதத்தை குறைத்துக் கொள்ள முடியும்.

இவ்வாறான மாற்றுவழிகளை பயன்படுத்தாமல் கடன் உரிமையாளர்களுடன் இணக்கப்பாடொன்றை ஏற்படுத்திக் கொள்ளாமல் கடன் மறுசீரமைப்பு அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக தீர்மானித்து பலாத்காரமாக வங்கி மற்றும் ஓய்வூதிய நிதியங்கள் மீது சுமத்த முயற்சிப்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை நாங்கள் எதிர்க்கிறோம்.

மேலும் வங்கிகள் அரசாங்கத்திற்கு கடன் வழங்குவது அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையிலாகும். அரசாங்கம் பணம் இல்லாவிட்டால் பணம் அச்சிட்டாவது கடனை செலுத்தும் என்ற நம்பிக்கை வங்கிகளுக்கு இருக்கின்றன.

நாட்டில் இருக்கும் 5 வங்கிகள் மொத்த வருமானத்தில் 25 வீதம் அரசாங்கத்துக்கு கடனாக வழங்கி இருக்கிறது. அவ்வாறான நிலையில் அரசாங்கம் வங்கிகளுடன் கலந்துரையாடாமல் தன்னிச்சையாக செயற்பட முடியுமா?. அவ்வாறு செயற்படுவதை அரச பயங்கரவாதமாகவே நாங்கள் பார்க்கிறோம்.

அதேநேரம் ஊழியர் சேமலாப நிதியத்தில் 80 வீதம் அரசாங்கத்துக்கு கடன் வழங்கி இருப்பதாக எமக்கு உத்தியோகபூர்வமற்ற வகையில் தகவல் கிடைத்திருக்கிறது.

எனவே அரசாங்கம் தேசிய கடன் மறுசீரமைப்பு மேற்கொள்வதாக இருந்தால் பாராளுமன்றம், வங்கிகள் மற்றும் கடன் உரிமையாளர்களுடன் கலந்துரையாடி மாத்திரமே இதனை செய்ய முடியும். மாறாக அரசாங்கத்துக்கு நினைத்த பிரகாரம் செய்ய முடியாது என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம் என்றார்.

No comments:

Post a Comment