ஜப்பானின் இலகு ரயில் திட்டத்தை திடீரென இரத்து செய்ததைப் போன்று இனி எவராலும் தன்னிச்சையாக செயற்பட முடியாது - பந்துல குணவர்தன - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 23, 2023

ஜப்பானின் இலகு ரயில் திட்டத்தை திடீரென இரத்து செய்ததைப் போன்று இனி எவராலும் தன்னிச்சையாக செயற்பட முடியாது - பந்துல குணவர்தன

(எம்.மனோசித்ரா)

அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் அரசாங்கங்களுக்கிடையில் செய்து கொள்ளப்படும் எந்தவொரு ஒப்பந்தத்தையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும், பாராளுமன்றத்தின் அனுமதியுடனேயே அவற்றில் திருத்தங்களை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எனவே ஜப்பானின் இலகு ரயில் வேலைத்திட்டத்தை திடீரென இரத்து செய்ததைப் போன்று, எவராலும் எந்தவொரு திட்டத்தையும் தன்னிச்சையாக இடைநிறுத்த முடியாது என்றும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை (23)இடம்பெற்றபோது இதனைத் தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன மேலும் குறிப்பிடுகையில், சில அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் எமது நாட்டுக்கு பொருளாதார ரீதியில் பாரிய நன்மைகளை அளித்துள்ளன. அவ்வாறானதொரு வேலைத்திட்டமான அவிசாவளையிலிருந்து கொழும்புக்கான இலத்திரனியல் புகையிரத சேவை திடீரென இடை நிறுத்தப்பட்டது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவிருந்த அந்த முக்கியமான வேலைத்திட்டத்தை இழந்துள்ளோம். அதேபோன்று ஜப்பானின் இலகு ரயில் சேவையும் இவ்வாறு இடை நிறுத்தப்பட்டது.

எனவே அரசாங்கத்தினால் ஏதேனுமொரு வேலைத்திட்டத்துக்காக செய்து கொள்ளப்படும் எந்தவொரு உடன்படிக்கையையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும், அவற்றில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமெனில் பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி சிறந்த யோசனையொன்றை அமைச்சரவையில் முன்வைத்துள்ளார்.

எனவே அரசாங்கங்களுக்கிடையில் செய்து கொள்ளப்படும் எந்தவொரு உடன்படிக்கையையும் நினைத்தபடி மாற்றவோ அல்லது இரத்து செய்யவோ முடியாது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், அதற்கு முன்னர் இவ்வாறானதொரு அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும் என்றார்.

இதேவேளை புதிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மதிப்பீடு செய்வதற்காக தேசிய அபிவிருத்திக் குழுவொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சரியான வகையில் அடையாளங் காணப்படாத மற்றும் முறைசார் மதிப்பீடுகளற்ற கருத்திட்டங்கள் அல்லது வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதால் கடந்த காலங்களில் அமுல்படுத்தப்பட்ட ஒரு

சில கருத்திட்டங்கள் மூலம் எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறுகளை அடைய முடியாமல் போயுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதனால், அரசின் புதிய வேலைத்திட்டங்களை மதிப்பீடு செய்யும் செயன்முறைக்கு தேசிய அபிவிருத்திக் குழுவொன்றை நியமிப்பதற்கான முன்மொழிவு 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் நிதி விடயதான அமைச்சரான ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டது.

அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பெறுகைக் குழுவால் கருத்தில் கொள்ளப்பட்ட மதிப்பீட்டு செலவுகள் அல்லது அதற்கு அதிகமான மதிப்பீட்டு செலவுகளுடன் கூடிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக தனது பரிந்துரைகளை அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பதற்காக முன்னாள் திறைசேரி பிரதிச் செயலாளராக கடமையாற்றிய தயா லியனகே தலைமையிலான குழுவொன்றை நியமிப்பதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment