ராஜகுமாரி மரணம் தொடர்பில் குரலெழுப்பிய மனோ : ஆதரவாக நின்ற சஜித், விமல் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 24, 2023

ராஜகுமாரி மரணம் தொடர்பில் குரலெழுப்பிய மனோ : ஆதரவாக நின்ற சஜித், விமல்

(எம்,ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

கொழும்பில் வீட்டுப் பணிப் பெண்ணாக இருந்து வந்த நிலையில் வெலிக்கடை பொலிஸாரின் தாக்குதலில் மரணமடைந்த மலையக பெண்ணின் குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். அதனால் அவரின் மரணம் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

பாராளுமன்றம் புதன்கிழமை (24) பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் கூடியது.

பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனாே கணேசன் விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையில், பதுளை தெமோதர பிரதேசத்தைச் சேர்ந்த ராஜகுமாரி என்ற பெண் கொழும்பில் சுதர்மா நெத்திகுமார என்ற கலைஞரின் வீட்டிலே பணி புரிந்து வந்த நிலையிலேயே அவர் மரணித்துள்ளார்.

அவரை கொலை செய்ததாகவே நாங்கள் தெரிவிக்கிறோம். என்றாலும் வெலிக்கடை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் குறித்த பெண் மரணமடைந்த நிலையில் எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல் அவரின் சடலம் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

அவரின் மரணம் தொடர்பாக பக்கச்சார்ப்பற்ற விசாரணை இடம்பெற வேண்டும். அதற்காக பெண்ணின் சடலத்தை மீண்டும் தோண்டி எடுத்து, பேராதனை பல்கலைக்கழகத்தின் சட்ட மருத்துவ பீடத்துக்கு அனுப்பி சுயாதீன விசாரணை ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். என்றார்.

அதனைத் தொடர்ந்து எழுந்த விமல் வீரவன்ச எம்.பி. குறிப்பிடுகையில், மனோ கணேசன் எழுப்பிய பிரச்சினை உணர்வுபூர்வமான விடயமாகும்.

இந்தப் பிரச்சினையை எவருக்கும் புறக்கனித்து செல்ல முடியாது. குறித்த மலையக பெண் பணி புரிந்த சுதர்மா என்பவரின் வீட்டிலே நகை காணாமல் போனமை தொடர்பில் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்.

சுதர்மா பொலிஸ் நிலையத்தில் இருக்கும் நிலையில் அவருக்கு முன்னாலே அந்த பெண்ணை பொலிஸார் தாக்கி இருக்கிறனர். இதனை பார்த்துக் கொண்டு சுதர்மா தொலைபேசியில் தனது நண்பர்களுக்கு அறிவித்திருக்கிறார்.

பொலிஸ் நிலையத்தில் யாரையும் அடித்து கொலை செய்ய முடியாது. அதனால் குறித்த பெண்ணுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.

அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிடுகையில், பொருளாதார கஷ்டம் காரணமாகவே மலையத்தில் இருக்கும் மக்கள் கொழும்புக்கு வேலைக்கு வருகின்றனர். அதனால் மரணித்துள்ள பெண்ணின் மரணம் தொடர்பாக பக்கச்சார்ப்பற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

மலையத்தில் இருந்து கொழும்புக்கு வரும் அந்த மக்களுக்கு நீதி கிடைக்குமா என்ற சந்தேகம் அந்த மக்களுக்கு இருந்து வருகிறது. அதனால் இது தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொண்டு அந்த குடும்பத்துக்கு நீதியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment