(எம்.ஆர்.எம்.வசீம்)
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தேசிய வேட்பாளராக போட்டியிடுவது நிச்சயமாகும். அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் அவர் வெற்றி பெறுவதும் உறுதியாகும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஜனாதிபதித் தேர்தல் 2024 இல் இடம்பெற இருக்கிறது. அதில் ரணில் விக்ரமசிங்க வேட்பாளராக களமிறங்குவது நிச்சயமாகும். அதேபோன்று அதில் அவர் வெற்றி பெறுவதும் உறுதியாகும்.
ஏனெனில், தேசத்தின் தேவையை நிறைவேற்றுவதற்காக ரணில் விக்ரமசிங்க தேசிய வேட்பாளராக களமிறங்கவுள்ளார். அவர் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடமாட்டார். ஏனெனில், தேசத்தின் தேவைப்பாடே நாட்டில் தற்போது இருக்கிறது.
கோட்டாபய ராஜபக்ஷவினால் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை கொண்டுசெல்ல முடியாமல்போன சந்தர்ப்பத்தில், நாட்டை பொறுப்பேற்று நடத்த யாரும் முன்வரவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் கடிதம் எழுதி நிபந்தனை விதித்து வந்தார். அநுரகுமார திஸாநாயக்க ஒளிந்து கொண்டார். அந்த சந்தர்ப்பத்திலேயே ரணில் விக்ரமசிங்க முன்வந்து வங்குரோத்து அடைந்திருந்த நாட்டை மீளக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்திருக்கிறார்.
அதனால் தேசத்தின் தேவையை நிறைவேற்றுவதற்கு முன்வந்த ரணில் விக்ரமசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய வேட்பாளராகவே போட்டியிட இருக்கிறார்.
ஜனாதிபதித் தேர்தலில் அவர் வெற்றி பெறுவதும் உறுதியாகும். ஏனெனில், ஐக்கிய மக்கள் சக்தி உட்பட அனைத்து கட்சிகளின் ஆதரவும் ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைப்பது நிச்சயமாகும்.
ஏனெனில் தற்போதே பல கட்சிகளில் இருந்து ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க பலரும் முன்வந்திருக்கின்றனர். எதிர்காலத்தில் இன்னும் பலர் எம்முடன் இணைந்து கொள்ள இருக்கின்றனர் என்றார்.
No comments:
Post a Comment