(இராஜதுரை ஹஷான்)
எரிபொருள் விலை குறைப்புக்கு அமைய பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது. ஜூன் மாத வருடாந்த கட்டண திருத்தத்தின்போது கட்டணத்தை குறைக்க எதிர்பார்த்துள்ளோம் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் அமுலாகும் வகையில் சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலையை 135 ரூபாவினாலும், ஒரு லீற்றர் டீசலின் விலையை 15 ரூபாவினாலும் குறைத்துள்ளது.
இந்த விலை குறைப்புக்கு அமைய பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது. அண்மையில் 12.9 சதவீததத்தால் பஸ் கட்டணம் குறைக்கப்பட்டது. எதிர்வரும் மாதம் வருடாந்த கட்டண திருத்தத்தின்போது பஸ் கட்டணத்தை திருத்தம் செய்ய எதிர்பார்த்துள்ளோம்.
பஸ்களின் உதிரிபாகங்களின் விலையை குறைத்தால் அதன் பயனை மக்களுக்கு எம்மால் வழங்க முடியும். பஸ்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் கோட்டாவை அதிகரித்துக் கொடுக்குமாறு மின்சாரத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment