ஆபத்தான சூழ்நிலைகளில் 14 உடல்களை மீட்ட இலங்கை சுழியோடிகள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 24, 2023

ஆபத்தான சூழ்நிலைகளில் 14 உடல்களை மீட்ட இலங்கை சுழியோடிகள்

இந்து சமுத்திரப் பகுதியில் மூழ்கிய சீன மீன்பிடிக் கப்பலில் இருந்து இதுவரை இலங்கை சுழியோடிகள் 14 உடல்களை மீட்டுள்ளனர்.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இலங்கை கடற்படை இலங்கைக்கு தெற்கே அவுஸ்திரேலிய தேடுதல் மீட்பு பகுதியில் மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளது.

கடலில் மூழ்கிய சீன மீன்பிடிக் கப்பலான லுபெங் யுவான் யு 028 இல் காணப்பட்டவர்களை மீட்பதற்கான முயற்சிகளில் உதவுவதற்காகவே தேடுதல் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் எஸ்எல்என்எஸ் விஜயபாகு கடற்படையின் சுழியோடிகளுடன் முக்கியமான பணியில் ஈடுபடுவதற்காக அனுப்பப்பட்டது என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் உத்தரவின் பேரிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

குறிப்பிட்ட பகுதியை சென்றடைந்த இலங்கை கடற்படையின் சுழியோடிகள் தலைகீழாக காணப்பட்ட கப்பலில் எவராவது உயிருடன் உள்ளனரா என்பதை கண்டுபிடிப்பதற்காக எயர்பொக்கட்களை மிகவும் துல்லியமாக ஆராய்ந்துள்ளனர்.

கண்ணிற்கு எதுவும் தென்படாத நிலைநீர் கொந்தளிப்பு ஆகிய சவாலான சூழ்நிலைகளின் மத்தியில் கடுமையாக சுழியோடிய பின்னர் கடற்படை சுழியோடிகள் தலைமை மாலுமியின் கபின் மற்றும் தங்கும் அறைகளில் இருந்து இரண்டு உடல்களை மீட்டுள்ளனர் எனவும் கடற்படை தெரிவித்துள்ளது.

இதனைத் தவிர கப்பலின் வேறு பகுதிகளில் இருந்து மேலும் 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment