இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை ஆகிய மூன்று நிறுவனங்களும் கடந்த வருடத்தில் முதல் எட்டு மாதங்களில் மாத்திரம் 85,400 கோடி ரூபா நட்டமீட்டியுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொருளாதார நெருக்கடி அழுத்தங்களை சமப்படுத்துவதற்காக பாராளுமன்ற பிரிவின் கண்காணிப்பு தெரிவுக் குழுவின் தலைவர் காமினி வலேபொட இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அரசாங்க நிறுவனங்களில் நிலவும் நட்டத்தில் 99% இந்த நிறுவனங்களின் மூலமே ஏற்பட்டதாகவும் கடந்த பல வருடங்களாக இந்த மூன்று நிறுவனங்களையும் நட்டத்திலேயே இயங்கச் செய்துவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், அதனால் நாடு பெரும் கடன்சுமையை சுமக்க நேர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, நாட்டின் 52 முக்கிய அரச தொழிற்துறைகள் கடந்த வருடத்தின் முதல் எட்டு மாதத்தில் 72,600 கோடியை நட்டமீட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிறுவனங்களில் 52 அரச தொழில் முயற்சி நிறுவனங்களில் 32 நிறுவனங்கள் வரி அறவீட்டுக்கு முன்பதாக 13,400 கோடி இலாபம் பெற்ற நிறுவனங்கள் என்றும் ஏனைய 21 நிறுவனங்களும் 86,100 கோடி ரூபா நட்டமீட்டியுள்ளமை கணிப்பீட்டின் மூலம் தெரியவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிறுவனங்களை மீள இலாபமீட்டும் நிறுவனங்களாக கட்டியெழுப்புவதானால் அதற்கான ஒரே வழி தனியார் மயப்படுத்துவதே எனக்குறிப்பிட்டுள்ள அவர், அரச மற்றும் தனியார் இணைந்த செயற்பாட்டின் கீழ் அதனை முன்னெடுத்துச் செல்ல முடியுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment