ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், முக்கிய விஞ்ஞானி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலை தொடர்பாக விசாரணை செய்வதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட விஞ்ஞானி, ரஷ்யாவின் Sputnik V கொரோனா தடுப்பூசியை உருவாக்கியவர்களில் ஒருவரான அண்டிரு பொட்டிக்வ் (Andrey Botikov) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இதனிடையே, கொரோனாவுக்கு எதிராக பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக நல்ல பயனை தந்தது. ரஷ்ய அரசாங்கம் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை கண்டுபிடித்தது.
கடந்த 2020 இல் Sputnik V கொரோனா தடுப்பூசியை உருவாக்குவதில் மொத்தம் 18 விஞ்ஞானிகள் ஈடுபட்டிருந்தனர். அதில் ஒருவர்தான் கொல்லப்பட்ட அண்டிரு பொட்டிக்வ் (வயது 47).
கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் வி தடுப்பூசியை கண்டுபிடித்ததற்காக 18 அறிவியல் விஞ்ஞானிகளுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நாட்டின் உயரிய விருதை வழங்கி கௌரவித்தார்.
இந்நிலையில், ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த குழுவில் இடம்பெற்றிருந்த அறிவியல் விஞ்ஞானி அண்டிரு பொட்டிக்வ் நேற்று (04) அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில், வடமேற்கு மாஸ்கோவில் அமைந்துள்ள அவரது குடியிருப்பில் வைத்து, கழுத்தை நெரித்து கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் ஒருமுறை இவரது குடியிருப்புக்குள் புகுந்து பணத்திற்காக ஒருவர் மிரட்டிய விவகாரத்தில், உயிர் தப்பியிருந்தார். இந்த நிலையில், தற்போது விஞ்ஞானி அண்டிரு பொட்டிக்வ் கொலை வழக்கில் 29 வயதான நபர் ஒருவர் கைதாகியுள்ளார்.
சந்தேக நபர் சம்பவ இடத்தில் இருந்து தப்ப முயன்றபோது, துரித நடவடிக்கையால் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், அவர் மீது கொலை வழக்கும் பதியப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
கைதான நபர் முதற்கட்ட விசாரணையிலேயே குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் விஞ்ஞானியை கொலை செய்த நபர் ஏற்கனவே, குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்றவர் எனவும் கூறப்படுகிறது.
10 ஆண்டுகள் வரையில் அந்த நபர் சிறைத் தண்டனை அனுபவித்தவர் எனவும், பாலியல் தொழில் செய்யும் விடுதி ஒன்றை நடத்தி வந்தவர் எனவும் கூறப்படுகிறது.
அண்டிரு பொட்டிக்வ் தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியலுக்கான தேசிய ஆராய்ச்சி மையத்தில் மூத்த ஆராய்ச்சியாளராக பணியாற்றி வந்துள்ளார்.
No comments:
Post a Comment