சீன எக்சிம் வங்கியினால் வழங்கப்பட்ட நிதி உத்தரவாதக் கடிதத்தை இலங்கைக்கான சீன பிரதித் தூதுவர் நிதியமைச்சின் செயலாளரிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
இலங்கைக்கான சீன பிரதித் தூதுவர் ஹு வெய் (Hu Wei) இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
எதிர்காலத்தில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராயும் நோக்கில் சீன பெரு நிறுவனங்கள் இலங்கைக்கு விஜயம் செய்யும் எனவும் பிரதித் தூதுவர் தெரிவித்தார்.
இதன்போது ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.
இலங்கை அதன் அனைத்து பிரதான கடன் வழங்குநர்களிடமிருந்தும் நிதி உத்தரவாதத்தை பெற்றுள்ளதால், 2022 செப்டெம்பர் 01 எட்டப்பட்ட பணிக்குழாம் மட்ட ஒப்பந்தத்தின் கீழ், நிதி வசதி வழங்குவது தொடர்பில் எதிர்வரும் மார்ச் 20 இல் இடம்பெறும் சபை கூட்டத்தில் பரிசீலிக்கப்படுமென, சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை விடுத்துள்ள, IMF ஆசிய மற்றும் பசிபிக் பிரிவின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சபையின் ஒப்புதல் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட ஏனைய கடன் வழங்குநர்களிடமிருந்து நிதியுதவியை ஊக்கப்படுத்தும்.
இந்த ஏற்பாடானது, இலங்கை அதன் தற்போதைய நெருக்கடியிலிருந்து மீண்டு வலுவான மற்றும் உள்ளீர்க்கப்பட்ட வளர்ச்சிப் பாதையில் அமைத்துக் கொள்ள உதவுவதோடு, அதிகாரிகள் ஏற்கனவே மேற்கொண்டுள்ள சீர்திருத்தங்கள் தொடர்பில் அவர்களது வேலைத்திட்டத்தை ஆதரவளிக்கும்.
No comments:
Post a Comment