தேர்தலுக்கு அரசாங்கம் எவ்விதத்திலும் தடையேற்படுத்தவில்லை - பிரதமர் தினேஷ் குணவர்தன - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 7, 2023

தேர்தலுக்கு அரசாங்கம் எவ்விதத்திலும் தடையேற்படுத்தவில்லை - பிரதமர் தினேஷ் குணவர்தன

(எம.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் பொறுப்பேற்றல் கடமையில் இருந்து விலகுமாறு மாவட்ட செயலாளர்களுக்கு அறிவிக்கும் தீர்மானம் ஏதும் அமைச்சரவையில் எடுக்கப்படவில்லை. தவறான அறிவிப்பை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அக்கணமே திருத்திக் கொண்டார். உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் எவ்விதத்திலும் தடையேற்படுத்தவில்லை. உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையுத்தரவுக்கு அமைய அரச அதிகாரிகள் செயற்படுவார்கள் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (07) செவ்வாய்க்கிழமை நிலையியற் கட்டளை இருபத்தேழு,இரண்டின் கீழ் எதிர்க்கட்சி தலைவர் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும்கூறுகையில், தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டம் கூடவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்ட விடயம் அடிப்படையற்றதாகும். ஜனாதிபதி தலைமையில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை காலையும் தேசிய பாதுகாப்பு சபை கூடுகிறது.

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தன்மையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் என்ற ரீதியில் சபைக்கு தெளிவுபடுத்தினார்.

திறைசேரியின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு செல்வதை தடுப்பதற்காகவே அவர் தேசிய பாதுகாப்பு சபைக்கு அழைக்கப்பட்டுள்ளார் என எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிடுவதும் அடிப்பமையற்றதாகும். தேசிய பாதுகாப்பு சபைக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் அதனை மறுக்க முடியாது.

தேர்தல் ஆணைக்குழு விடுத்த அழைப்பு தொடர்பில் திறைசேரியின் செயலாளர் ஆணைககுழுவுடன் பேசி ஒரு தீர்மானத்தை எடுப்பார்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் என்ற ரீதியில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் பலமுறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளேன். தேர்தல் திருத்தச் சட்டம், தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு பல யோசனைகளை முன்வைத்துள்ளது. சுதந்திரமான முறையில் தேர்தலை நடத்தும் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

கட்டுப்பணம் ஏற்றல் பணியில் இருந்து மாவட்ட செயலாளர்களை விலகிக் கொள்ளுமாறு அறிவிக்கும் தீர்மானத்தை அமைச்சரவை எடுக்கவில்லை. தவறுதலாக வெளியிட்ட அறிக்கையை பொதுநிர்வாக அமைச்சர் மறுகணமே திருத்திக் கொண்டார். தேர்தல் செயற்பாடுகளுக்கு தடையேற்படுத்த வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது என்றார்.

No comments:

Post a Comment