(இராஜதுரை ஹஷான்)
இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெறும். தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ தலைமையில் நாளை (07) விசேட பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொதுஜன பெரமுன பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடுவது அடிப்படையற்றதாகும். ஏனைய அரசியல் கட்சிகளை காட்டிலும் தேர்தல் நடவடிக்கைளை நாங்களே முன்னெடுத்தோம். முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தை அநுராதபுரத்தில் நடத்த தீர்மானித்திருந்தோம்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்தியதைத் தொடர்ந்து தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை இடைநிறுத்தினோம். உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தடையுத்தரவை தொடர்ந்து தேர்தல் பணிகளை ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் தலைமையில் விசேட பேச்சுவார்த்தை நாளை பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இடம்பெறவுள்ளது. அநுராதபுர நகரில் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தை நடத்த எதிர்பார்த்துள்ளோம்.
இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெறும். பொதுஜனபெரமுன கிராம புற அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளது. ஆகவே நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றார்.
No comments:
Post a Comment