13 ஐ அமுல்படுத்துவது, இனப் பிரச்சினைக்கு தீர்வை காண்பது ஜனாதிபதியின் கையில்தான் உள்ளது என தெரிவித்த இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர் கட்சிகளின் ஒன்றிணைந்த செயற்பாடு தொடர்பில் முடிவு எடுக்கப்படள்ளது என தெரிவித்தார்.
தற்போதைய அரசியல் மற்றும் சமகால நிலமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இம்மாதம் 19 ஆம் திகதி நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அக்கூட்டத்தில் தமிழ் தேசிய கட்சிகளின் ஒன்றிணைந்த செயற்பாடு தொடர்பில் முடிவு எடுக்கப்படும்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பிலான நடவடிக்கைகளால் தமிழ் கட்சிகளுக்குள் சில குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. எனினும் இது நிரந்தர முடிவுகள் அல்ல. தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வு மற்றும் உடனடி பிரச்சினை தீர்வுகளுக்காக நாம் ஒன்றிணைந்தே செயற்பட வேண்டும்.
ஏற்கனவே எமது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசி அதனை விரைவில் தீர்ப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம், 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது என பலவிடயங்கள் கலந்துரையாடப்பட்டு வாக்குறுதியும் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் தற்போதைய சூழலில் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு பெளத்த பிக்குகளே எதிர்த்து வருகின்ற நிலை காணப்படுகிறது. 13 ஆவது திருத்தத்தை நடைமுறைபடுத்துவது, இனப் பிரச்சினை தீர்வு விடயங்களில் பெளத்த தேரர்களும், தென்னிலங்கை கட்சிகள் நடந்து கொள்ளும் விதங்கள் தொடர்பில் நாம் கவலை கொண்டுள்ளோம்.
இந்த விடயங்களை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதிதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருடைய நிலமை எமக்கு கவலை தருவதாக இருப்பதுடன் ஏமாற்றமாகவும் இருக்கின்றது.
இத்தகைய விடயங்களில் தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதே கட்டாய தேவையாகவும் உள்ளது இதனை விரைவில் நாம் செயற்படுத்தி ஒன்றிணைவோம் என்றார்.
No comments:
Post a Comment