(எம்.மனோசித்ரா)
கோட்டாபய ராஜபக்ஷ மீது பொதுஜன பெரமுனவும், மக்களும் நம்பிக்கை கொண்டிருந்தமை தவறு என்ற நிலைப்பாட்டை தோன்றச் செய்த ஜனாதிபதிக்கு நன்றி கூற வேண்டும். அதற்காக அவர் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் சரியென நாம் கூறவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக் காலத்திலேயே சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறு எம்மால் வலியுறுத்தப்பட்டமைக்கமைய அன்றைய அரசாங்கம் செயற்பட்டிருந்தால், இலங்கை வங்குரோத்தடைந்த நாடாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்காது.
ஆனால் கால தாமதமாகி நாணய நிதியத்தை நாடியதால் அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட கடன் தொகையை அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக அன்றி ஏனைய கடன்களை மீளச் செலுத்துவதற்கும், அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கும் பயன்படுத்த வேண்டியேற்பட்டுள்ளது.
நாட்டில் பொருளாதார மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். அதற்காக இலாபமீட்டும் அரச நிறுவனங்களை விற்க இடமளிக்க முடியாது. அத்தோடு புதிய வர்த்தக சந்தைகளை ஏற்படுத்த வேண்டும். அதற்காக தனியார் துறைகளை ஊக்குவிக்க வேண்டும்.
திறந்த வர்த்தக சந்தைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும். அதற்கமைய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எரிபொருள் விநியோகத்திற்கான அனுமதியை வழங்க தீர்மானித்துள்ளமையை தனிப்பட்ட ரீதியில் நான் ஏற்றுக் கொள்கின்றேன். எனினும் கட்சி ரீதியில் இது குறித்து இதுவரையில் கலந்துரையாடப்படவில்லை.
பொதுஜன பெரமுனவினர் தாம் தேர்தலுக்குத் தயார் எனக் கூறுகின்றனர். ஆனால் அவர்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி தேர்தலைக் காலம் தாழ்த்துகின்றார். நீதிமன்றத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது. எம்மையும், ஜே.வி.பி.யையும் கண்டு அஞ்சியே அவர்கள் தேர்தலைக் காலம் தாழ்த்துகின்றனர்.
எவ்வாறிருப்பினும் கோட்டாபய ராஜபக்ஷ மீது பொதுஜன பெரமுனவும், மக்களும் நம்பிக்கை கொண்டிருந்தமை தவறு என்ற நிலைப்பாட்டை தோன்றச் செய்த ஜனாதிபதிக்கு நன்றி கூற வேண்டும். அதற்காக அவர் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் சரியென நாம் கூறவில்லை. தற்போது ஊடகங்களையும் முடக்கும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க உட்பட ஊடகங்களை முடக்குவதற்கு நடவடிக்கை எடுத்த அனைத்து தலைவர்களும் அதில் தோல்வி கண்டனர். இதனால் அவர்கள் பெரும் நெருக்கடிகளையும் எதிர்கொள்ள நேரிட்டது. எனவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது அதனை நினைவில் கொண்டு செயற்பட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment