நாளையே நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டாலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே அப்போதும் வெற்றி பெறுவார் என, அமைச்சர் ஜீவன் தொண்டமான் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வேண்டுமென்றால், எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மட்டும் மாற்றம் ஏற்படலாம். ஜனாதிபதியாக மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவே மக்களால் தெரிவு செய்யப்படுவார் எனவும், அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று சர்வஜன வாக்குரிமை மீதான சபை ஒத்திவைப்புவேளை இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், "எனக்கு முன்னர் சபையில் உரையாற்றிய செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் இது போன்ற காலத்தில் எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்பதற்கு அவர் ஒரு சிறந்த முன்னுதாரணம்.
நாம் ஒன்றை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். கடந்த வருடம் இது போன்ற தினத்தில் விவசாயிகள் மிகவும் கஷ்டத்துக்குள்ளாகி உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலையில் காணப்பட்டார்கள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சிறந்த வேலைத்திட்டங்களால் அந்த நிலையை தற்போது மாற்றியுள்ளார்.
எரிபொருள், எரிவாயு, மருந்துத் தட்டுப்பாடு, பால்மாத் தட்டுப்பாடு, 13 மணி நேர மின் துண்டிப்பு என அந்தக் கஷ்ட காலத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து ஜனாதிபதி சிறந்ததொரு நிலையை தற்போது நாட்டில் ஏற்படுத்தியுள்ளார் என்பதை எவரும் மறந்து விடக்கூடாது.
அரசாங்கத்தின் புள்ளிவிபரங்களின்படி, கடந்த வருடம் உணவுப் பொருட்களின் பண வீக்கம் 100 வீதமாக அதிகரித்திருந்தது. அந்த நிலையில், வர்த்தகர்கள் 300 வீதம் பொருட்களின் விலைகளை அதிகரித்திருந்தார்கள். 100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு பொருள் 400 ரூபா வரை அதிகரித்திருந்தது.
இத்தகைய மோசமான நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு என்ன செய்வது என்ற நிர்க்கதியான நிலையில் இருந்த போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்று தற்போது இந்த நிலைமைக்கு கட்டியெழுப்பியுள்ளார்.
இவ்வாறான சூழ்நிலையில் நாடு உள்ளபோது, எதிர்க்கட்சியின் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும்? தமது அரசியல் நோக்கங்களை எல்லாம் ஒருபுறம் வைத்துவிட்டு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்றார்.
இதேவேளை, "தவறுகள் இருந்தால் அதனை சுட்டிக்காட்ட வேண்டும். 1991ஆம் ஆண்டு இந்திய நாட்டுக்கும் இதே நிலைமையே ஏற்பட்டது. அப்போது எதிர்க்கட்சிகள் அனைத்துமே அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியதால், இன்று இந்தியா உலகின் ஐந்தாவது வளர்ச்சியடைந்த நாடாக காணப்படுகிறது. அவ்வாறான சிந்தனை எமது அரசியல் தலைவர்களுக்கு கிடையாது என்பதே கவலையான விடயம்.
நாட்டில் இதுவரை சட்டங்கள் உபயோகிக்கப்பட்டாலும், மக்களை சந்தோஷப்படுத்துவதற்காகவே சட்டங்கள் உபயோகிக்கப்பட்டதே தவிர, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு சட்டங்கள் பயன்படுத்தப்படவில்லை.
நாட்டில் யுத்தம் நடந்த காலத்திலும் நாட்டின் ஏற்றுமதி வருமானம் 40 வீதமாக அதிகரித்திருந்தது. இன்று நாட்டில் யுத்தம் கிடையாது என்றாலும், அதில் அரைவாசியாக 20 வீதமாக எமது ஏற்றுமதி குறைவடைந்துள்ளது. முன்னர் தவறான பொருளாதார தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதால்தான், இன்று எமது தலைமுறை கஷ்டப்படுகிறது.
அரசாங்க நிறுவனங்களின் நட்டத்தை நாம் பார்த்தால், தற்போது பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மாத்திரம் ஆயிரம் பில்லியன்கள் நட்டத்தில் உள்ளது. அரசாங்கம் கல்விக்கும் சுகாதாரத்துக்கும் ஒதுக்கும் நிதியை சேர்த்துப் பார்த்தாலும், இந்தளவு நிதி வராது.
இத்தகைய நிறுவனங்களுக்கு தொடர்ச்சியாக கடன் வாங்கி கடன் வாங்கி உயிர் கொடுக்கப்பட்டுள்ளது. மின்சார சபை 300 பில்லியன் ரூபா கடனைக் காட்டுகிறது. அத்துடன் 100 பில்லியன் ரூபா நஷ்டமும் அடைந்துள்ளது. எனினும், முறைகேடுகளை விடுவதற்கு அவர்களுக்கு மனமில்லை.
இந்த நட்டம் எமது சுகாதாரத்துறையின் மருந்துகள் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் விட அதிகமானது. இதனை நிவர்த்தி செய்வதற்கு அமைச்சர் கஞ்சன விஜேசேகர எடுத்த தீர்மானத்தை நாம் வரவேற்கின்றோம்.
2019ஆம் ஆண்டு உலகளாவிய பொருளாதார நெருக்கடி, கொவிட் என பல சர்வதேச பிரச்சினைகள் காணப்பட்டன. சர்வதேச நாடுகளில் யுத்தங்களும் இடம்பெற்றன. அத்தகைய சந்தர்ப்பத்தில் இலங்கை அரசாங்கம் விட்ட பெரும் தவறு வரியைக் குறைத்ததே.
தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரி அதிகரிப்பை மேற்கொண்டுள்ளார். எனினும், நாட்டில் 20 வீதமாகவுள்ள பணக்காரர்கள் மீதே இந்த வரி சுமத்தப்பட்டுள்ளது. அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் வறுமைக்கோட்டில் உள்ள மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்பதே எமது நம்பிக்கை.
கடந்த மாதங்களில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இன்று உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு 16,000 மில்லியன் ரூபா செலவாகவுள்ளது. இதனால் நாட்டில் என்ன மாற்றம் ஏற்படப் போகின்றது?
நாம் ஜனநாயகத்துக்கு எதிரானவர்கள் அல்ல. மக்கள் ஆணையை அறிந்துகொள்ள ஜனாதிபதித் தேர்தலை நாளையே நடத்தினாலும் அதனை நாம் ஆதரிப்போம்.
நாட்டின் தற்போதைய நிலையில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டால், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே மீண்டும் வெற்றி பெறுவார். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மட்டும் மாற்றம் ஏற்படலாம்.
தனி மனிதனாக இருந்துகொண்டு பாராளுமன்றத்திலும் தனக்கான பலத்தை ஏற்படுத்தி நாட்டை ஏதோவொரு வகையில் முன்னேற்றப் பாதைக்கு ஜனாதிபதி கொண்டு செல்கின்றார். நாடு இயல்பு நிலைக்குத் திரும்பியதும் எந்த தேர்தலையும் நடத்தலாம்" எனவும் அவர் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment