சுற்றுலா இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையில் நியூஸிலாந்தின் ஹமில்டனில் இடம்பெற்ற 3ஆவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
அந்த வகையில் 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் தொடரை 2-0 என வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுபெடுத்தாடி 41.3 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்களையும் இழந்து 157 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
இலங்கை அணி சார்பில் பெத்தும் நிஸ்ஸங்க 57 (64) ஓட்டங்களையும், சாமிக்க கருணாரத்ன 24 (42) ஓட்டங்களையும் அணித் தலைவர் தசுன் ஷானக்க 31 (36) ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
நியூஸிலாந்து அணி சார்பில் மேட் ஹென்றி, ஹென்றி சிப்லே, டெரில் மிச்சல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பதிலுக்கு 158 எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 32.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
நியூஸிலாந்து அணி சார்பில் வில் யங் 86 (113) ஓட்டங்களையும் ஹென்றி நிகொல்ஸ் 44 (52) ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
இலங்கை அணி சார்பில் லஹிரு குமார 2 விக்கெட்டுகளையும் தசுன் ஷானக மற்றும் கசுன் ராஜித ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
அந்த வகையில் உலகக் கிண்ண சுப்பர் லீக் புள்ளிப் பட்டியலில் தற்போது 81 புள்ளிகளுடன் 9 ஆவது இடத்தில் இருக்கும் இலங்கை அணி இன்றைய போட்டியில் வெற்றியீட்டினால் மேலும் சில அணிகளின் சர்வதேச போட்டிகளின் முடிவின் அடிப்படையில் இலங்கை அணிக்கு உலகக் கிண்ணத்திற்கு நேரடியாக நுழையும் வாய்ப்பு இருந்த நிலையில், இப்போட்டியில் தோல்வியுற்றதால் அவ்வாய்ப்பை இலங்கை அணி இழந்துள்ளது.
அதற்கமைய, இலங்கை அணி உலகக் கிண்ணத்தில் விளையாட தகுதி பெறுவதற்காக சிம்பாப்வேயில் நடைபெறவுள்ள தகுதிகாண் போட்டியில் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment