(எம்.வை.எம்.சியாம்)
மின்சார கட்டணம் செலுத்துவதாகக்கூறி 10 கோடி ரூபாவை மோசடி செய்த நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் கசினோ விளையாட்டுகளுக்கு தீவிரமாக அடிமையான 24 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் கொழும்பில் உள்ள பிரபல கசினோ நிலையம் ஒன்றுக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணையின் போது இராணுவ விசேட அதிரடிப் படையில் இருந்து தப்பிச் சென்ற முன்னாள் இராணுவ வீரர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் கசினோவிற்கு வருகை தரும் வர்த்தகர்களின் மின் கட்டணத்தை செலுத்துவதாகக்கூறி ஏமாற்றி வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இலட்சக்கணக்கான ரூபா மின்சாரக் கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் குறிப்பிட்ட கையடக்கத் தொலைபேசி விண்ணப்பம் மூலம் செலுத்தினால் 20 வீதம் தள்ளுபடி பெற்றுக் கொள்ளலாம் என்று கூறி மோசடி செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேகநபர் இணையம் மூலம் பணம் பெற்று மின் கட்டணத்தை செலுத்தியதை சரிபார்க்கும் வகையில் மின்சார வாரியத்தின் கட்டணத்தை இணையத்தினூடாக செலுத்தும் மூன்றாம் தரப்பு நிறுவனத்தின் கணக்கை ஹேக் செய்துள்ளார்.
இதேவேளை, இலங்கை மின்சார சபையின் இணையத்தளத்திலும் கட்டணம் செலுத்தப்பட்டதாக புதுப்பிக்கப்பட்டாலும் தரவு தளத்திற்கு பணம் மாற்றப்படவில்லை.
மேலும் விசாரணையில் இணையத்தளங்களை ஹேக் செய்வது எப்படி என்பதை அவரே கற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
60 இலட்சம் ரூபாவிற்கு மேல் மோசடி செய்துள்ளதாகவும் அந்தப் பணத்தில் கசினோ விளையாட்டில் ஈடுபட்டதாகவும் அவர் ஒப்புக் கொண்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக ஊடக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேகநபருடன் தொடர்புடைய மேலும் பல தரகர்களைக் கைது செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment