(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)
பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து நாடு மீள ஆரம்பித்திருக்கின்றது. அதனால் சுவாசிப்பதற்கு முடியுமான நிலைமையை ஏற்படுத்துவதற்கு சில மாதங்கள் ஜனாதிபதிக்கு அவகாசம் வழங்க வேண்டும். அதன் பின்னர் தேர்தல் பற்றி சிந்திக்க முடியும் என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (22) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான ஏழாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஜனாதிபதியினால் அடுத்த ஆண்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் நாட்டின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொள்வதற்கான அடித்தளமாக அமைந்துள்ளது.
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்த்து அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்துக் கொள்ளும் யோசனைகள் அதில் முன்வைக்கப்பட்டுள்ளன. அதனை புரிந்து கொள்ளாத எதிர்க்கட்சியினர் சிறு பகுதியைப் பிடித்துக் கொண்டு விமர்சிப்பதையே தொழிலாக செய்கின்றனர்.
இந்தக் காலத்துக்கு பொருத்தமான இதைவிட சிறந்த யோசனைகள் இருந்தால் அவர்கள் முன்வைக்கட்டும் என நான் கேட்டுக் கொள்கின்றேன்.
கடன் தொடர்பான முதலாவது தவணைக் கட்டணத்தை அடுத்த வருடத்தில் செலுத்த வேண்டியுள்ளது. அதற்கு தேவையான நிதி தேவைப்படுகிறது. அதற்குள் நாட்டின் நிதி நெருக்கடியை தீர்க்க வேண்டிய அவசியம் காணப்படுகிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறுசிறு பிரச்சினைகளை அன்றி முழு நாட்டையும் இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகின்றார். அவ்வாறான தலைவர் அவர் மட்டுமே என உலகளவில் அவர் பாராட்டப்படுகிறார்.
கடந்த 74 வருடங்களாக நாம் பிளவுபட்டு செயல்பட்டதாலேயே இத்தகைய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அதனால் இன்னும் காலம் கடந்து போகவில்லை ஒரு வருடம் இணைந்து செயல்பட்டு அதன் பின் தேர்தல் பற்றி சிந்திப்போம்.
சிறந்த சிங்கள பாடல் ஒன்றை ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது. அந்தப் பாடல் நாம் இனம், மதம் என பிளவுபட்டு செயல்படுவதாலேயே நாடு ஒரே இடத்தில் சுற்றிக் கொண்டிருக்கின்றது என குறிப்பிடுகின்றது.
இந்த நிலை மாற்றம் பெற வேண்டும். தமிழ், சிங்களம், முஸ்லிம் என அனைத்து மக்களும் இணைந்து இந்த பயணத்தை முன்னெடுக்க வேண்டும். அதற்காக ஜனாதிபதி எடுத்து வரும் வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிக்குமாறு எதிர்க்கட்சியை கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.
No comments:
Post a Comment