பொருளாதார பாதிப்பு ஒரு குடும்பத்தின் ஆரோக்கியத்தை முழுமையாக இல்லாதொழித்துள்ளது - ஹரினி அமரசூரிய - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 30, 2022

பொருளாதார பாதிப்பு ஒரு குடும்பத்தின் ஆரோக்கியத்தை முழுமையாக இல்லாதொழித்துள்ளது - ஹரினி அமரசூரிய

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

தூரநோக்கமற்ற வகையில் அரசாங்கம் எடுத்த முட்டாள்த்தனமான தீர்மானத்தினால் நாட்டின் விவசாயத்துறை முழுமையாக வீழ்ச்சியடைந்து உணவு பாதுகாப்பை அச்சுறுத்தல் நிலைக்கு கொண்டு சென்றது. பொருளாதார பாதிப்பு ஒரு குடும்பத்தின் ஆரோக்கியத்தை முழுமையாக இல்லாதொழித்துள்ளது. சமூக கட்டமைப்பில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு இந்த வரவு செலவுத் திட்டத்தில் தீர்வு முன்வைக்கப்படவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (30) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கைத்தொழில், வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவில்லை. உணவு பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும். நாட்டின் உணவு பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது.

உணவு பாதுகாப்புக்கு 0.6 சதவீதமளவு நிதிதான் ஒதுக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், உணவு வீண் விரயத்தை கட்டுப்படுத்தவும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் எவ்வித பரிந்துரைகளும் முன்வைக்கப்படவில்லை. உணவு பாதுகாப்பு ஆணைக்குழு உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறியுள்ளமை கோப் குழுவின் போது ஆராயப்பட்டது.

நாட்டின் மொத்த சனத் தொகையில் 32 சதவீதமானோர் பாதுகாப்பற்ற உணவு அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாக உலக உணவு ஸ்தாபனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அத்துடன் பெரும்பாலான மக்கள் மூன்று வேளை உணவுக்கு பதிலாக ஒன்று அல்லது இருவேளை உணவை மாத்திரம் உட்கொள்கிறார்கள்.

பண வீக்கம் அதிகரித்து செல்வதால் உணவு பண வீக்கம் நாளாந்தம் அதிகரித்துச் செல்கிறது. நடுத்தர மக்களால் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நகரங்களின் உணவு பண வீக்கம் கடந்த மாதம் 85.5 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.

2019 ஆம் ஆண்டு அரசாங்கம் எவ்விதமான தூரநோக்கமற்ற வகையில் எடுத்த முட்டள்த்தனமான தீர்மானத்தினால் நாட்டின் விவசாயத்துறை முழுமையாக வீழ்ச்சியடைந்து உணவு பாதுகாப்பை அச்சுறுத்தல் நிலைக்கு கொண்டு சென்றது. பொருளாதார பாதிப்பு ஒரு குடும்பத்தின் ஆரோக்கியத்தை முழுமையாக இல்லாதொழித்துள்ளது.

தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு அமைய நான்கு உறுப்பினர்களை கொண்ட ஒரு குடும்பம் ஆரோக்கியமான உணவுகளுடன் மூன்று வேளையும் உணவு உட்கொள்ள வேண்டுமாயின் ஒரு மாதத்திற்கு ஒன்றரை இலட்சம் ரூபா செலவு செய்ய வேண்டிய நிலை காணப்படுகிறது என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

நாட்டில் மாதம் ஒன்றரை இலட்சம் சம்பளம் பெறும் குடும்பங்கள் எத்தனை உள்ளன என்பதை அரசாங்கம் ஆராய வேண்டும். இவ்வாறான பின்னணியில் மாதம் ஒரு இலட்சம் சம்பளம் பெறும் தரப்பினரிடம் இருந்து வரி அறவிட வரவு செலவுத் திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்களில் பெரும்பாலானோர் பசிக்கு உணவு உட்கொள்வதுடன், ஆரோக்கியமற்ற உணவை பெற்றுக் கொள்ளும் நெருக்கடியை தற்போது எதிர்கொள்கிறார்கள். தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளை மாத்திரம் உணவு வழங்க கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களும் உணவு தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளார்கள், ஆகவே ஒட்டு மொத்த பாடசாலை மாணவர்களுக்கும் சத்துணவு வழங்க அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment